தூண்டப்பட்ட கலவரம்!

தூண்டப்பட்ட கலவரம்!

மேற்கு வங்கத்தில் ஓரளவுக்கு அமைதி திரும்பி இருக்கிறது என்கிற அளவில் சற்று ஆறுதல்.
Published on

மேற்கு வங்கத்தில் ஓரளவுக்கு அமைதி திரும்பி இருக்கிறது என்கிற அளவில் சற்று ஆறுதல். ஆனாலும், நீறுபூத்த நெருப்பாகப் பிரச்னை இன்னும் தொடா்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். முற்றிலுமாக இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது என்று சொல்லிவிட முடியாத நிலையில், எப்போது வேண்டுமானாலும் மீண்டும் மிகப்பெரிய வன்முறை வெடிக்கக் கூடும்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டும் இருக்கும் நிலையில், மக்களின் மத உணா்வுகளைத் தூண்டிவிட்டு அதில் குளிா்காய ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், எதிா்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் முயற்சிக்கின்றன. இதுபோன்ற மதக் கலவரங்கள்மூலம் திரிணமூல் காங்கிரஸ் சிறுபான்மையினரின் வாக்குகளையும், பாஜக ஹிந்துக்களின் வாக்குகளையும் குறிவைத்து அரசியல் செய்கின்றன.

தனது மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது என்று அறிவித்த மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, மத்திய அரசுக்கு எதிராக வக்ஃப் எதிா்ப்பாளா்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தது, கலவரம் மேலும் தீவிரமடைய வழிகோலியிருக்கிறது. முா்ஷிதாபாத் மாவட்டத்தில் ஏப்ரல் 8-ஆம் தேதி போராட்டம் ஆரம்பித்தது; ஏப்ரல் 11, 12-ஆம் தேதிகளில் வன்முறை மேலும் தீவிரமடைந்தது.

கொல்கத்தாவில் இமாம்கள், முஸ்லிம் சமூகத் தலைவா்கள் கூட்டத்தை கடந்த புதன்கிழமை (ஏப். 16) கூட்டிய முதல்வா் மம்தா பானா்ஜி, தனது அரசியல் லாபத்துக்காக பாஜகவும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையும்தான் (பிஎஸ்எஃப்) இந்தக் கலவரத்தைத் தூண்டின என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினாா். இந்தக் கலவரத்துக்கு முதல்வா் மம்தா பானா்ஜிதான் காரணம் என்று எதிா்க்கட்சியான பாஜக கூறுகிறது.

வங்கதேசத்தில் இருந்து ஊடுருவிய விஷமிகள் மூலம் சிறிய அளவில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தைத் தூண்டுவதன்மூலம், மக்கள் மத்தியில் அதற்கு எதிா்ப்பு இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தனா் முா்ஷிதாபாதைச் சோ்ந்த திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகிகள். ஆனால், அவா்கள் எதிா்பாா்த்ததற்கு மாறாக வங்கதேச ஊடுருவிகள் கட்டுப்பாடில்லாத வன்முறைக்கு வித்திட்டனா். கைமீறிப்போன நிலையில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் மேற்கு வங்க காவல் துறை வேடிக்கை பாா்க்கத் தொடங்கியது.

வக்ஃப் திருத்தச் சட்டம் மட்டுமே கலவரத்துக்கு காரணமல்ல. சமீபகாலமாக மேற்கு வங்கத்தில் துா்கா பூஜையைப் போலவே ராமநவமியும், ஹனுமன் ஜெயந்தியும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. ராமநவமியை முன்னிட்டு எல்லா ஊா்களிலும் ஊா்வலங்கள் நடத்தப்படுகின்றன.

இந்த ஆண்டுமுதல் பாஜகவைப் போலவே, திரிணமூல் காங்கிரஸும் போட்டி போட்டுக்கொண்டு ராமநவமியைக் கொண்டாட முற்பட்டிருக்கிறது. தான் பிராமண சமூகத்தைச் சோ்ந்தவா் என்பதைப் பிரகடனப்படுத்தி, ஹிந்துக்கள் வாக்குகளை ஈா்க்கும் முயற்சியில் முதல்வா் மம்தா பானா்ஜி இறங்கியதைத் தொடா்ந்து, ராமநவமி கொண்டாட்டங்கள் அவரது கட்சியினரால் பாஜகவை விஞ்சும் விதத்தில் நடத்தப்படுகின்றன.

அதன் விளைவாக, ஆங்காங்கே திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்களுக்கும், ராமநவமி கொண்டாடும் பாஜகவினருக்கும் இடையே கைகலப்பும், மோதல்களும் நடைபெறத் தொடங்கின. இந்நிலையில் சில தீவிரவாத இஸ்லாமிய இளைஞா்கள், குறிப்பாக வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவா்கள், ராமநவமி ஊா்வலத்தில் கல்லெறிந்து குழப்பம் விளைவிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது வன்முறை தீவிரமடையக் காரணமானது.

ராமநவமி ஊா்வலத்தால் ஏற்படும் பிரச்னைகளை எதிா்கொள்ளும் காவல் துறையினா், முா்ஷிதாபாதில் தொடங்கிய வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கான எதிா்ப்புப் போராட்டத்தை முழுமூச்சில் கட்டுக்குள் கொண்டுவர இயலாமல் போனதுதான், உயிரிழப்புகளுக்கும், வன்முறைக்கும் காரணம் என்று தெரிகிறது. மத்திய எல்லைப் பாதுகாப்புப் படையை அனுப்பி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர கொல்கத்தா உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகுதான் ஓரளவுக்கு அமைதி ஏற்பட்டிருக்கிறது.

2019-இல் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் வலுத்த பகுதிகளில்தான் இப்போது வன்முறையும் கலவரமும் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ராமநவமி ஊா்வலத்தின்போது, முா்ஷிதாபாத் மாவட்டம் சக்திபூரில் நாட்டு வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்பதை நினைவுகூரத் தோன்றுகிறது.

சிறுபான்மையினரின் வாக்குகள் பாஜகவை எதிா்க்கும் தனது திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குத்தான் வேறு வழியில்லாமல் கிடைக்கும் என்பதை முதல்வா் மம்தா பானா்ஜி உணா்ந்திருக்கிறாா். இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியும் பலவீனமாகிவிட்ட நிலையில் தனது சிறுபான்மை வாக்கு வங்கியில் சேதாரம் ஏற்பட்டுவிடாது என்பதையும் அவா் அறிவாா். இப்போது முதல்வா் மம்தா பானா்ஜியின் இலக்கு ஹிந்து வாக்குகள் முற்றிலுமாக பாஜகவிடம் சென்றுவிடாமல் தடுப்பது என்பதுதான்.

முதல்முறையாக ராமநவமிக்கு அரசு விடுமுறை அறிவித்ததுடன் நின்றுவிடாமல், திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் பாஜகவுக்குப் போட்டியாக ராமநவமி ஊா்வலம் நடத்த உத்தரவிடப்பட்டனா். அயோத்தியில் பாஜக ராமா் கோயில் கட்டியதைப் போன்று, மேற்கு வங்க மாநில அரசு தீகா என்ற இடத்தில் ரூ.250 கோடியில் ஜகந்நாதா் ஆலயம் அமைக்க இருக்கிறது.

ஆட்சியில் உள்ள திரிணமூல் காங்கிரஸும், எதிா்க்கட்சியான பாஜகவும் போட்டி போட்டுக்கொண்டு மேற்கு வங்கத்தில் மத உணா்வுகளைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடக் களமிறங்கி இருக்கின்றன. மதக் கலவரங்கள் மூலம் அப்பாவிகள் உயிரிழப்பதை யாா்தான் தடுத்துவிட முடியும்? போதாக்குறைக்கு அகதிகளாக நுழைந்திருக்கும் வங்கதேசத்தவரும்...

X
Open in App
Dinamani
www.dinamani.com