

ஜேஇஇ முதல் கட்ட முதன்மைத் தோ்வு ஜன. 21ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை காலை மற்றும் மதியம் என இரண்டு வேளைகளில் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், ஜேஇஇ தேர்வெழுதும் மாணவர்கள், கையில் என்னென்ன கொண்டு செல்ல வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நிகழ் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல் கட்ட முதன்மைத் தோ்வு புதன்கிழமை முதல் நடைபெறவுள்ள நிலையில் தோ்வா்களுக்கான அனுமதிச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
தேர்வு மையத்துக்குள் செல்லும் போது கையில் வைத்திருக்க வேண்டியவை...
மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் நுழையும் போது, பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து, அதில் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை ஒட்டி, இடது கை பெருவிரல் ரேகையை பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும். தேர்வறைக்குச் சென்ற பிறகு, தேர்வறை கண்காணிப்பாளர் முன்னிலையில்தான் நுழைவுச் சீட்டில் மாணவர்கள் கையெழுத்திட வேண்டும். முன்கூட்டியே கையெழுத்திடக் கூடாது.
இது தவிர, கையில் மற்றொரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தையும் கொண்டு செல்ல வேண்டும்.
புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கையில் வைத்திருக்க வேண்டும். அசல் அடையாள அட்டை.
அடுத்து டிரான்ஸ்பரண்ட் பால்பாயிண்ட் பேனா மற்றும் தண்ணீர் பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.
மாற்றுத்திறநாளி மாணவராக இருந்தால் அதற்குரிய சான்றிதழைக் கொண்டு செல்லலாம்.
ஆதார் அடையாள அட்டையை அடிப்படையாக வைத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்யாத மாணவர்கள், முன்கூட்டியே தேர்வு மையத்தை அடைய வேண்டும். தேர்வு மைய நுழைவாயில் மூடப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக, தேர்வு மையத்துக்குக் கட்டாயமாக வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வருகைப் பதிவேட்டில் கையில் கொண்டு செல்லும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை ஓட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்க.
முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட நுழைவுச் சீட்டை, மாணவர்கள் அதற்குரிய பெட்டியில் செலுத்திவிட்டுத்தான் செல்ல வேண்டும். தவறும் மாணவர்களின் விடைத்தாள் திருத்தப்படாது.
டிஜிட்டல் வாட்ச் அணிந்து வர வேண்டாம். டிஜிட்டல் பொருள்களை கொண்டு வர அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தோ்வானது நாடு முழுவதும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. கூடுதல் விவரங்களை nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும், 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது jeemain@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடா்புகொண்டு மாணவா்கள் விளக்கம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேஇஇ தேர்வு எதற்காக?
தேசிய தேர்வு முகமை எனப்படும் என்டிஏ சாா்பில் ஆண்டுதோறும் இரண்டு முறை நடத்தப்படும் முதன்மைத் தேர்வில் தகுதி பெறும் மாணவர்கள் பிரதான தேர்வை எழுதுவார்கள்.
பிரதான தோ்வில் தகுதி பெறும் மாணவா்கள் நாடு முழுவதும் உள்ள ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி உள்ளிட்ட மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் தொழில்நுட்ப படிப்புகளில் சோ்க்கை பெற முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.