பொறியியல் கல்லூரிகள், வரும் கல்வியாண்டுக்கான அனுமதி கோரி விண்ணப்பித்திருக்கும் நிலையில், போலி பேராசிரியர்களைக் கண்டறிய நவீன தொழில்நுட்பங்களை அண்ணா பல்கலைக்கழகம் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
பேராசிரியர்களின் புவிக்குறியிடப்பட்ட புகைப்படங்கள், விடியோ பதிவுகள் போன்றவை, பொறியியல் கல்லூரிகளை ஆய்வு செய்யும்போது பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முகத்தை அடையாளம் கண்டு உறுதி செய்யும் அமைப்பையும் அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கியிருக்கிறது.
2026 -2027ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதி கோரி தமிழகத்தில் 463 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன.
இதன்படி, அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் துறை ஆசிரியர்களுக்கு புவிக்குறியிடப்பட்ட புகைப்படத்துடன் கூடிய 10 இலக்க ஆசிரியர் அடையாள எண்ணை (FIN) வழங்கியிருந்தது. அதில் அவர்களது கல்வித் திறன் உள்ளிட்டவை முழுமையாக பதிவு செய்யப்பட்டிருக்கும். இவற்றைக் கொண்டு பேராசிரியர்கள் எங்கு பணியாற்றுகிறார்கள் என்பது உறுதி செய்யப்பட விருக்கிறது.
ஜூன் 10ஆம் தேதிக்குள் அனைத்து ஆய்வுப் பணிகளும் நிறைவடையவிருக்கின்றன. பொறியியல் கல்லூரிகளுக்கான ரேங்க் பட்டியல் ஜூன் 29ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அதற்கு முன்னதாக, விண்ணப்பித்த கல்லூரிகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் போலியான பேராசிரியர்கள் எண்ணிக்கைக் காட்டப்படுவதாக புகார் எழுந்த நிலையில், இந்த ஆய்வு தொடங்கப்பட்டுளள்து.
கடந்த பல ஆண்டுகளாக, கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பல்வேறு கல்லூரிகளில் ஒரே நேரத்தில் பணியாற்றுவதாகக் கணக்குக் காட்டப்பட்டுள்ளதாக தரவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து அண்ணா பல்கலை நடத்திய ஆய்வில், அவ்வாறு 300 பேராசிரியர்கள் முறைகேடாக பணியாற்றவில்லை, அந்த எண்ணிக்கை 1000க்கும் மேல் என்று கண்டறிந்ததிருந்தது.
Summary
Anna University's new initiative to weed out fake professors in engineering colleges
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









