முருங்கைக் காய் எதுக்கெல்லாம் நல்லது?

முருங்கைக் காய் எதுக்கெல்லாம் நல்லது?

முன்பெல்லாம் நம் வீட்டு தோட்டத்தில் எப்போதும் எளிதில் கிடைக்கும் காய் முருங்கை.

முன்பெல்லாம் நம் வீட்டு தோட்டத்தில் எப்போதும் எளிதில் கிடைக்கும் காய் முருங்கை. வீடே முருங்கைக் காய் சமையல் செய்த தினத்தில் மணக்கும். ஆனால் வீடுகள் எல்லாம் ப்ளாட்களாகிப் போன இந்த நவீன வாழ்வியலில் கடைகளிலிலாவது முருங்கையை அடிக்கடி வாங்கி சமைத்து உண்ண வேண்டும். காரணம் அதிலுள்ள மருத்துவ குணமும் நிறைந்த சத்துக்களும் தான். 'முந்தானை முடிச்சு' திரைப்படத்தில் மூலம் பரவலாக கவனம் பெற்ற முருங்கைக் காயின் மற்ற பலன்களைப் பற்றியும் பார்க்கலாம்.

1. சளித் தொல்லை நீங்கும்

முருங்கைக் காயில் வைட்டமின் சி உள்ளது.  தொண்டை வறட்சி, சளி போன்ற பிரச்னையால் உடல் நலக் குறைவு ஏற்பட்டால் அதை சரி செய்ய முருங்கை சூப் தயாரித்து சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும். முருங்கைக் கீரையும் மருத்துவ குணம் கொண்டது. கீரையைப் பொரியல் அல்லது மசியல் செய்து அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் ஆஸ்துமா, வீசிங் போன்ற எந்த சுவாசப் பிரச்னைகளும் நெருங்காது. 

2. எலும்பு வலுவாகும்

இரும்புச் சத்து, வைட்டமின்கள் மற்றும் கால்ஷியம் முருங்கைக் கீரையில் அதிகளவு உள்ளது. முருங்கைக் கீரையை மசித்து பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வர ரத்தம் சுத்தீகரிக்கப்படும். முருங்கைக் காய் உடலிலுள்ள எலும்புகளை நன்றாக வலுவடையச் செய்து தெம்புடன் இருக்க உதவும்.

3. கர்ப்பிணிகளுக்கு நல்லது

கர்ப்பிணிகளுக்குத் தேவையான இரும்புச் சத்து, கால்ஷியம் மற்றும் வைட்டமின்கள் அனைத்தும் முருங்கையில் உள்ளன. முருங்கை டானிக், முருங்கைக் காய் மற்றும் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் சுகப் பிரசவம் ஆவது உறுதி. தவிர பிரசவத்துக்குப் பின் உடல் பழைய நிலைக்கு விரைவில் திரும்பவும் முருங்கை மருத்துவம் உதவும். முருங்கைக் கீரையை உப்பு போட்டு வேக வைத்து, நீரை வடிகட்டி, அதைக் கடைந்து, சாதத்தில் சிறிது நெய் ஊற்றிப் பிசைந்து தினமும் சாப்பிட்டு வந்தால் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.

4. ஆண்மை சக்தி பெருகும்
  
முருங்கைக்காய் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மிகவும் நல்லது. ஆண்கள் பலத்துடன் இருக்க மாமிச உணவுகளை பரிந்துரை செய்வார்கள். ஆனால் சைவத்தில் முருங்கையை விட சிறந்தது எதுவுமில்லை. முருங்கையை பொடி செய்து தினமும் சாப்பிட்டால் மலட்டுத்தன்மை நீங்கும். தவிர தாம்பத்திய வாழ்க்கையில் இன்பத்துக்கும் விந்துக்கள் பலம் பெறவும் முருங்கை சிறந்த மருந்தாகும்.

5. அஜீரணக் கோளாறுகள்

முருங்கைக் கீரைச் சாறு எடுத்து, அதைத் தேனில் கலந்து ஒரு தம்பர் இளநீருடன் கலந்து தினமும் இரண்டு அல்லது மூன்று தடவை குடித்தால் வயிற்றுப்போக்கு, காலரா, ஜாண்டீஸ் போன்ற நோய்களின் தாக்கம் குறையும். விரைவில் குணமடைய சித்த மருத்துவர்களின் பரிந்துரையின் படி முருங்கை மருத்துவத்தைப் பின்பற்ற வேண்டும்.

6. இரும்புச் சத்து

முருங்கைச் சாறு குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. அதில் அவர்களுக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைத்துவிடும். எலும்பு வளர்ச்சிக்கும் உறுதிக்கும் முருங்கை மிகவும் நல்லது. ரத்தத்தை சுத்திகரீக்கும், முருங்கையில் கால்ஷியம், இரும்பு மற்றும் வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் நல்லது.

7. நுரையீரல் பிரச்னைகள்

முருங்கைக் காய் ஆஸ்துமா சம்மந்தப்பட்ட பிரச்னைகளுக்கு நல்ல மருந்தாகும். முருங்கைக் காய் போட்டு ஆவி பிடித்தால் சுவாசப் பிரச்னைகளுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

8. சருமத்தை பளபளப்பாக்கும்

முருங்கைக்காய் சாறு சருமத்தை பளபளக்கச் செய்யும். அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவி சற்று ஊற வைத்தபின் கழுவினால் முகம் பொலிவடையும். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பரு, கரும்புள்ளி, மரு போன்ற சரும பிரச்னைகள் குணமாகி அன்றலர்ந்த மலர் போல முகம் பிரகாசமாக இருக்கும்.

9. சிறுநீர்ப் பிரச்னைகள்

அசிடிட்டி பிரச்னையால் சிறுநீர் பிரியும் போது  ஏற்படும் எரிச்சல் மற்றும் கடுப்புக்கு முருங்கைக் காய் மருத்துவமே சிறந்தது. ஒரு டீஸ்பூன் முருங்கை இலைச் சாறில் வெள்ளரிக்காய் அல்லது கேரட் ஜூஸ் சிறிதளவு கலந்து தினமும் குடிக்க வேண்டும். மிக விரைவில் நல்ல பலன் கிடைக்கும். 

10. சர்க்கரை வியாதியை மட்டுப்படுத்தும்

1982-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 36 சர்க்கரை வியாதி நோயாளிகளை அழைத்து ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டார்கள். அதில் முருங்கையை அடிக்கடி சாப்பிட்ட 30 நபர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்திருந்தது கண்டுபிடித்தார்கள். 

இது தவிர மேலும் பல பலன்களை முருங்கை காய் தருகிறது. இது எலும்பு வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் அடர்த்திக்கு மிகவும் நல்லது. புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் முருங்கை மருத்துவத்துக்கு உண்டு. குடலில் அல்சர் மற்றும் ட்யூமர் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும். கண்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை சீர் செய்து பார்வையை தெளிவாக்கும். 

பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளுக்கும் முருங்கை நல்லது. கருப்பையில் ஏற்படும் ஃபைப்ராய்ட் போன்ற பிரச்னைகளுக்கு நல்ல நிவாரணம் தருவது முருங்கை மட்டுமே. மூளை சம்பந்தப்பட்ட பிரச்னைக்கும் முருங்கை ஏற்றது. இப்படி உச்சி முதல் உள்ளங்கால் வரை என்ன பிரச்னைகள் என்றாலும் முருங்கையிடம் தீர்வு உள்ளது என்றால் மிகையில்லை. எனவே இன்றே முடிவெடுத்து தினமும் முருங்கைக் காய் அல்லது கீரையை உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்க்கையை வாழுங்கள்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com