/

கல்வி, வேலைவாய்ப்பில் சலுகைகளை இழக்கும் தமிழர்கள்

புது தில்லி, ஜூன் 15: சாதிச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் மாநில அரசின் கல்வி, வேலைவாய்ப்புச் சலுகைகளைப் பெற முடியாமல் தில்லி வாழ் தமிழர்கள் தவித்து வருகின்றனர். நாட்டின் தலைநகரான தில்லியில

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:39 am

வே.சுந்தரேஸ்வரன்

புது தில்லி, ஜூன் 15: சாதிச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் மாநில அரசின் கல்வி, வேலைவாய்ப்புச் சலுகைகளைப் பெற முடியாமல் தில்லி வாழ் தமிழர்கள் தவித்து வருகின்றனர்.

நாட்டின் தலைநகரான தில்லியில் சுமார் 75 ஆண்டுகளாக தமிழர்கள் வசித்து வருகின்றனர். தொடக்கக் காலத்தில் தில்லி கரோல் பாக் பகுதியில் தமிழர்கள் குடியேறியதாகக் கூறப்படுகிறது.

தற்போது மயூர் விஹார், ரோஹிணி, ஜனக்புரி, ஆர்.கே.புரம், இந்தர்புரி, ஜக்கூர்பூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் சுமார் 14 லட்சம் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

வீட்டு வேலை முதல் அரசு, தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகள் வரை தமிழர்கள் இல்லாத துறைகளே இல்லை. அந்த அளவுக்கு தலைநகரின் மகோன்னத வளர்ச்சிக்கு முக்கியப் பங்களிப்பு செய்து வருகின்றனர். எனினும் சாதிச் சான்றிதழ் பெறுவதில் மிகுந்த அலைக்கழிப்பையும், இடையூறையும் தாங்கள் சந்திக்க வேண்டியுள்ளதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தில்லிவாழ் தமிழர்களுக்கு ரேஷன் அட்டை, இருப்பிடச் சான்று உள்ளிட்டவை பெறுவதில் ஏற்கெனவே சில சிக்கல்கள் இருந்தாலும், சாதிச்சான்று பெறுவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இதனால், தாங்களும், தங்களது குழந்தைகளும் மாநில அரசின் சலுகைகளை இழக்க நேரிடுவதாக கூறுகின்றனர்.

தொடக்கப் பள்ளிகள் அளவில் குழந்தைகளைச் சேர்க்கும்போது சாதிச் சான்று அளிதால்தான் அக்குழந்தைகளுக்கு அரசின் கல்வி உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

பெற்றோர்கள் சாதிச் சான்றிதழ் வைத்திருந்தால் அதன்மூலம் குழந்தைக்குச் சாதிச் சான்றிதழ் பெற முடிகிறது.

சாதிச் சான்றிதழ் இல்லாத தமிழர்கள் தங்களது பூர்வீக இடத்தில் உள்ள சாதியின் பெயரைக் குறிப்பிட்டு குழந்தைக்கு சான்றிதழ் பெறுவது என்பது தில்லியில் குதிரைக் கொம்பாக உள்ளது என்பது தமிழர்களின் ஆதங்கமாகும்.

""ஏற்கெனவே அவர்கள் பிறந்த இடத்திற்குச் சென்று சான்றிதழ் பெற்று வந்து அந்தச் சான்றிதழை அளித்து உரிய பரிசீலனைக்குப் பிறகே அந்தந்த வகுப்பினருக்கான சலுகைகளைப் பெற முடியும் என்ற நிலை உள்ளது.

ஆகவே, தில்லி, தமிழகம் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் அளவில் இதுபற்றி பேச்சு நடத்தி தமிழகத்தில் அரசு கெஜட்டில் உள்ள சாதிகளை தில்லி கெஜட்டில் இணைக்கவும் அல்லது எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்டோர் பயன்பெறுவதற்கான பொதுவான சாதிப் பட்டியலை இந்தியா முழுமைக்கும் தயாரிக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என்று தில்லித் தமிழ்க் கல்விக் கழகச் செயலர் ராஜு கூறினார்.

""பள்ளிகளில் குழந்தைகளுக்கு அரசின் கல்வி உதவி உள்ளிட்ட சலுகைகளைப் பெற வேண்டும் என்றால் சாதிச் சான்று அளிக்க வேண்டும். தில்லிவாழ் வட இந்தியர்களின் சாதி ஏற்கெனவே மாநில அரசின் கெஜட்டில் இருப்பதால் சாதிச்சான்று பெறுவது அவர்களுக்கு சிரமமாக இருப்பதில்லை.

ஆனால், புலம் பெயர்ந்த தமிழர்கள் பல ஆண்டுகளாக தில்லியையே தங்கள் பிறந்த இடமாக நினைத்து வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருக்கையில் இங்கு பிறந்து பள்ளிக் கூடம் செல்லும்போது அவர்களுக்கும் அரசின் சலுகையைக் கிடைக்கப் பெறச் செய்வதுதானே நியாயம்?

சாதிச் சான்றிதழ் இல்லாத தமிழர்களின் குழந்தைகள் பள்ளிகளில் பொதுப் பிரிவில் சேர்க்கப்படுவதால் எஸ்.சி., எஸ்.டி. பிரிவைச் சேர்ந்தவர்களாக அக்குழந்தைகள் இருந்தாலும் கூட அவர்களுக்கு சலுகைகள் கிடைப்பதில்லை. குறிப்பாக மாநில அரசு 1-ம் வகுப்பில் வழங்கும் கல்வி உதவித் தொகையான ரூ.1000 ஏழைத் தமிழ்க் குழந்தைகளுக்குக் கிடைக்காமல் போக நேரிடுகிறது'' என்று தில்லி மாநகராட்சித் தமிழ் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் வேதனை தெரிவித்தார்.

இதுகுறித்து தில்லியில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர் ஒருவர் கூறுகையில், "" பூர்வீகமான தமிழகத்தில் எனது மகன் பள்ளிப் படிப்பு இரு ஆண்டுகள் படித்துள்ள நிலையில், அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் சேர்க்க ஓ.பி.சி. சான்றிதழ் பெற வேண்டியிருந்தது. இதற்காக தமிழகத்தில் எங்கள் பகுதி வட்டாட்சியரை அணுகினேன்.

மகனின் பள்ளிச் சான்றிதழ், வீட்டு முகவரிக்கான எரிவாயு இணைப்பு சான்றிதழ் அளித்தும் போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறி ஓ.பி.சி. சான்றிதழ் தர மறுத்துவிட்டார். தமிழக அரசின் "மக்கள் சாசனம் 2007' விதியை எடுத்துக் கூறிய பிறகே சான்றிதழ் தர ஒப்புக்கொண்டனர்.

இதுபோன்ற விழிப்புணர்வு எத்தனை பேருக்கு இருக்கும்? ஆகவே, வருவாய்த் துறை ஊழியர்களுக்கு அரசின் வழிகாட்டுதல்களை சரியாக தெரியப்படுத்த வேண்டும். அத்துடன் சான்றிதழ் பெறுவது தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். அது தில்லிவாழ் தமிழர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.

இதுகுறித்து தில்லி முத்தமிழ்ப் பேரவைப் பொதுச் செயலர் இரா. முகுந்தன் கூறுகையில், ""தில்லியில் சாதிச் சான்று கிடைக்கப் பெறாமல் தமிழர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்தப் பிரச்னை தொடர்பாக தில்லி அரசுடன் பேசி தேவையான உதவிகளை தமிழர்களுக்குக் கிடைக்கச் செய்ய தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பவிருக்கிறோம். அடுத்த முறை தில்லி வரும்போது அவரை நேரில் சந்தித்து முறையிடவும் உள்ளோம்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.