இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கம் உருவாக 2002-ம் ஆண்டில் குஜராத்தில் நிகழ்ந்த கலவரம்தான் காரணம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஷகீல் அகமது கருத்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டர் இணையதளத்தில் அவர் மேலும் கூறியுள்ளது: குஜராத் கலவரத்தை அடுத்துதான் இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு உருவாக்கப்பட்டது என்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் தங்கள் மதவாத அரசியலைக் கைவிடவில்லை.
பாஜகவின் மதவாத அரசியலின் தொடர் விளைவாகத்தான் நாட்டில் பயங்கரவாத சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் நாட்டின் மதவாதத்தின் ஆணிவேராகத் திகழ்கின்றன. மதவாத அரசியல் கூடாது என்று நினைக்கும் அனைவரும் பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ்}க்கும் நெருக்கடி தர வேண்டும் என்று ஷகீல் அகமது கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின், ஆதரவுடன் இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது. நமது நாட்டில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு உள்ளிட்ட நாசவேலைகளில் இந்த பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
2007-ல் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு, 2008-ல் பெங்களூர், ஆமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு, ஜெய்ப்பூர், டெல்லி குண்டு வெடிப்பு ஆகியவற்றை இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகள்தான் நிகழ்த்தினர்.
2010-ம் ஆண்டில் புணே நகரில் நிகழ்ந்த குண்டு வெடிப்புக்கும், வாராணசி குண்டு வெடிப்புக்கும் அந்த அமைப்பு பொறுப்பேற்றது. 2011-ல் மும்பையில் தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தினர்.
சமீபத்தில் புத்த கயையில் தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தியதும் இதே பயங்கரவாத அமைப்பினர்தான்.
ஷகீல் அகமதுவுக்கு பாஜக பதிலடி
குஜராத் கலவரத்தால் இந்தியன் முஜாகிதீன் அமைப்பு உருவானது என்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஷகீல் அகமதின் கருத்து முட்டாள்தனமானது என்று பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக தில்லியில் அவர் மேலும் கூறியது: ஷகீல் அகமதின் கருத்து முட்டாள்தனமானது மட்டுமின்றி கடும் கண்டனத்துக்கும் உரியது. இந்தியாவில் பயங்கரவாத சம்பவங்களை நிகழ்த்த வேண்டும் என்பதற்காகவே பாகிஸ்தானில் உள்ள அமைப்புகள், இங்குள்ளவர்களைத் தூண்டி விட்டு வருகின்றன. உண்மை நிலை இப்படி இருக்க, மதப் பிரச்னையை எழுப்பி அரசியல் ஆதாயம் அடையும் நோக்குடன் காங்கிரஸ் தலைவர் பேசி வருகிறார்.
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல், பொருளாதாரச் சீரழிவு, வேலைவாய்ப்பு இன்மை, விலைவாசி உயர்வு, திறமையற்ற நிர்வாகம் போன்ற மக்களைப் பாதித்துள்ள பிரச்னைகளுக்கு அவர்களிடமிருந்து பதில் இல்லை.
இந்தியாவில் "சிமி' அமைப்பு பல ஆண்டுகளாக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டது. அந்த அமைப்பு தடை செய்யப்பட்ட பின், இந்தியன் முஜாகிதீன் என்ற பெயரில் செயல்படுகின்றது. இவர்களுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு உண்டு என்பது அனைவரும் அறிந்தது. இந்த சூழ்நிலையில் தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் தலைவர் கருத்துக் கூறி வருகிறார். அரசியல் ஆதாயத்துக்காக உள்நாட்டு பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்டுவிடக் கூடாது என்றார் ரவிசங்கர் பிரசாத்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் பொக்லைன் இயந்திரத்தின் வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ.300 உயா்வு

தனியாா் பள்ளிகளில் அரசியல், மத நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்ற உத்தரவுக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

விஜய்தாமு, தளவாய் சுந்தரம், இசக்கி சுப்பையா வெற்றியை எதிா்த்து தோ்தல் வழக்குகள் தாக்கல்







