/

ராணுவ கிடங்கு தீ விபத்து: இறந்தவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்வு

மகாராஷ்டிர மாநிலத்தில் புல்கான் நகரில் உள்ள ராணுவக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

News image
Updated On :1 ஜூன் 2016, 11:02 am

புல்கான் (மகாராஷ்டிரம்): மகாராஷ்டிர மாநிலத்தில் புல்கான் நகரில் உள்ள ராணுவக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கெனவே 16 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், இன்று மேலும் மூவரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன.

மகாராஷ்டிர மாநிலம், வார்தா மாவட்டத்தின் புல்கான் நகரில் அமைந்துள்ள ராணுவ ஆயுதக் கிடங்கில் நேற்று திடீரென தீ விபத்து நேரிட்டது. இதில் இரண்டு ராணுவ அதிகாரிகள் உள்பட 16 வீரர்கள் உயிரிழந்தனர்.

ஆசியாவிலேயே மிகப் பெரிய ஆயுதக் கிடங்கான இங்கு பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து கொண்டு வரப்படும் ஆயுதங்கள், வெடி பொருள்கள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவை இருப்பு வைக்கப்படும். நாட்டின் பல பகுதிகளுக்கு இந்தக் கிடங்கில் இருந்துதான் ஆயுத விநியோகம் செய்யப்படுகிறது.

நேற்று அதிகாலை 2 மணியளவில் இந்தக் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதில் 14 வீரர்களும், 2 அதிகாரிகளும் பலியானதாகவும் ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில், விபத்து நடைபெற்ற கிடங்கிலிருந்து மேலும் மூன்று ராணுவ வீரர்களின் உடல்கள் இன்று கைப்பற்றப்பட்டன. அடையாளம் காண இயலாத அளவுக்கு அந்த உடல்கள் கருகியிருந்தன.

இதையடுத்து இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 3 பேர், புணேவில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதனிடையே இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்கு ஒரு குழுவை அமைத்து ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீ விபத்துக்குப் பின்னணியில் எவ்வித சதி செயலும் இல்லை எனக் கூறிய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கர், விசாரணைக்குப் பின் விபத்துக்கான உரிய காரணங்கள் தெரியவரும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.