டென்மார்க் பயணி பாலியல் வழக்கு: 5 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டணை

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் கைதான ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தில்லி செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
Updated on
1 min read

புது தில்லி: டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் கைதான ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தில்லி செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் டென்மார்க் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தியதாக கைதான மகேந்திரா (எ) கஞ்சா(27), முகம்மது ராஜா(23), ராஜு(24),அர்ஜூன்(22), ராஜு சக்கா(23) ஆகிய ஐவர் மீதான குற்றச்சாட்டுகளும் சாட்சியங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர்களை குற்றவாளி என்று கடந்த திங்கள்கிழமை தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ரமேஷ் குமார் தீர்ப்பளித்தார்.

இதைத்தொடர்ந்து வழக்கின் தண்டனை மீதான வாதங்கள் வியாழக்கிழமை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி ரமேஷ் குமார் அறிவித்தார்.

வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போதே, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் மரணம் அடைந்துவிட்டடார்.

முன்னதாக தண்டனை குறித்த வழக்கு விசாரணையின் போது, போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் அதுல் ஸ்ரீவாஸ்தவா, "இந்தியாவில் வெளிநாட்டு பயணிகளை மிகவும் மரியாதையுடன் நடத்தி அவர்களை இறைவனுக்கு ஒப்பானவர்களாகக் கௌரவிக்க வேண்டும் என்ற கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆனால், ஆதரவற்ற நிலையில் வழி மாறிய டென்மார்க் பெண்ணை தவறாக வழிநடத்தி, அவரைக் கடத்தியும் அவரிடம் இருந்த பொருள்களை அபகரித்தது மட்டுமின்றி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கும் ஐவர் கும்பல் ஆளாக்கியுள்ளது.

இவர்களின் இழிவான செயல் மூலம் இந்தியாவின் நற்புகழுக்கு சர்வதேச சமூகம் மத்தியில் களங்கம் கற்பித்துள்ளனர். சம்பவ நாளில் தன்னை குற்றவாளிகள் கூட்டுப் பாலியல் செய்வதில் இருந்து தப்பிக்க தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக அந்த பெண் கூறியபோதும் அதை பொருள்படுத்தாமல் பாலியல் வன்முறையை ஐவரும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

இவர்களின் குற்றங்களை அரிதினும் அரிதான செயலாகக் கருதி அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்' என்று வாதிட்டார்.

குற்றவாளிகள் தரப்பில் தில்லி சட்ட உதவிகள் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் தினேஷ் சர்மா "ஏழ்மை நிலையிலும் பருவ வயதிலும் உள்ள குற்றவாளிகளின் எதிர்காலத்தைக் கருதி அவர்களுக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கலாம்' என்று கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com