கர்நாடகாவில் ஏலியன் கால்தடம்? மூச்சு விடும் பயங்கர சத்தத்தைக் கேட்ட கிராமத்தினர்: பின்னணி என்ன?

கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில், அடையாளம் காணப்படாத மிகப்பெரிய கால்தடங்களைப் பார்த்த கிராமத்தினர், அது ஏலியன்களின் கால்தடமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கர்நாடகாவில் ஏலியன் கால்தடம்? மூச்சு விடும் பயங்கர சத்தத்தைக் கேட்ட கிராமத்தினர்: பின்னணி என்ன?


கடக்: கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில், அடையாளம் காணப்படாத மிகப்பெரிய கால்தடங்களைப் பார்த்த கிராமத்தினர், அது ஏலியன்களின் கால்தடமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில், ஏதோ ஒரு உயிரினம் மூச்சு விடுவது போன்ற மிகப் பயங்கர சத்தத்தைக் கேட்டதாகவும் சிலர் கூற, அந்த சமயத்தில் கிராமத்தில் இருந்த நாய்கள் குரைத்ததாகவும், பிறகு எல்லாமே ஒன்று போல அமைதியாக இருந்துவிட்டதாகவும் சிலர் தெரிவித்தனர்.

அன்டுரு கிராமத்தில் இருக்கும் பண்ணைக்கு அருகே திறந்தவெளியில், சுமார் 20-30 பெரிய பெரிய கால் தடங்கள் இருந்ததைப் பார்த்த கிராமத்தினர், இதுவரை இதுபோன்ற கால்தடத்தைப் பார்த்ததில்லை என்றும், எந்த விலங்கின் கால் தடத்தோடும் இது ஒத்துப்போகவில்லை என்றும் கூறினர்.

அன்டுர் கிராமத்தில் இருக்கும் ஒரு விவசாயப் பண்ணைக்கு அருகே இந்த கால்தடம் பதிந்துள்ளது. ஒரே கோட்டில் நடந்து சென்றது போல பதிவான இந்த கால்தடத்தால், அன்டூர் கிராமத்துக்கு ஏலியன் அன்டுர் என்று மக்கள் கூறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது பற்றி செய்தி பரவியதால், பல சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமானோர் இந்த கால்தடங்களைப் பார்த்துச் செல்கின்றனர்.

கற்பனைப் படம்
கற்பனைப் படம்

இதில் சிலர், இந்த கால் தடங்கள் வேற்று கிரகத்தைச் சேர்ந்த ஏலியன்களின் கால்தடமாக (சர்வதேச சினிமாக்களில் உருவாக்கப்பட்ட ஜீவன்கள்) இருக்கலாம் என்று அச்சம் தெரிவித்ததால், அந்த கிராமத்தினர் அச்சத்தில் மூழ்கினர்.

இந்த அச்சம் காரணமாக பெண்களும், குழந்தைகளும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இது குறித்து வனத்துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமத்தினரின் அச்சத்தைப் போக்க, அப்பகுதியில் வனத்துறையினர் இரவு நேரங்களில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம், இந்த கால்தடங்கள் எந்த உயிரினத்தின் கால்தடங்கள் என்பதை கணிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

கிராமத்தினரின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு சமூக விரோதிகள் யாரேனும் இதுபோன்ற கால்தடங்களை உருவாக்கி பீதியைக் கிளப்பி வருகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.

இதுபோன்ற பீதி பரவுவது இந்த குடகு மாவட்டத்தில் இது முதல் முறையல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பு, கிராமத்தில் “நாளே பா” என்ற பீதி எழுந்தது. அப்போது மோகினி பேய் நாளைக்கு வரும் என்ற அச்சம் காரணமாக, ஏராளமான கிராமத்தினர் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் முடங்கினர். பிறகுதான், அப்பகுதியில் மாஃபியாக்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதும், அவர்கள்தான் மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க இதுபோன்ற பீதியைக் கிளப்பியதும் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com