

நியூ யார்க்: கதுவா போன்று சிறுபான்மையின மக்களுக்கு எதிரான குற்றச்செயல்களின்போது பிரதமர் மோடி வாய் திறக்காததற்கு நியூ யார்க் டைம்ஸ் தலையங்கத்தின் மூலம் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
பெண்கள், முஸ்லிம்கள், தலித்துகளுக்கு எதிராக நாட்டில் நடக்கும் வன்முறை பயங்கரவாதத்தின் போது பிரதமர் மோடி மௌனியாகிவிடுகிறார் என்று அதில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
'பெண்கள் தாக்கப்படும் போது அமைதி' என்ற தலைப்பில் நியூ யார்க் டைம்ஸ் செவ்வாயன்று ஒரு தலையங்கத்தை வெளியிட்டுள்ளது.
அதில், 'தான் ஒரு சிறந்த பேச்சாளர் என்பது போல, தனது டிவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது பதிவுகளைப் பொழியும் மோடி' என்றும்..
'இருந்த போதும், பெண்கள் மிக மோசமான வன்முறை பயங்கரவாதத்துக்கு உள்ளாகும்போதும், தனது கட்சியின் ஒரு பிரிவாக இருக்கும் தேசிய வாத சக்திகளின் இலக்காக சிறுபான்மையினர் உள்ளாகும் போதும் மட்டும் ஏனோ தெரியவில்லை, மோடி தனது குரல் வளத்தை இழந்துவிடுகிறார்' என்றும் குத்திக்காட்டப்பட்டுள்ளது.
அதே சமயம், சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து ஊடகங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பிறகு, கடந்த வெள்ளிக்கிழமை, பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். இந்த வழக்கு குறித்து பதிவு செய்ய இத்தனை காலம் மோடி காத்திருந்திருக்கிறார்.
மாட்டிறைச்சி விவகாரத்திலும், முஸ்லிம்கள், தலித் மக்கள் வன்முறையாளர்களால் கொன்று குவிக்கப்பட்ட போதும், பிரதமர் மோடி இதே மௌன அணுகுமுறையைத்தான் கடைபிடித்தார்.
தன்னை ஆதரிக்கும் நபர்கள் செய்யும் ஒவ்வொரு குற்றம் குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று மோடியிடம் யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், கதுவா போன்ற சம்பவங்கள் அசாதாரணமானவை. பல பயங்கர வன்முறைகளுக்கு எடுத்துக்காட்டான சம்பவங்கள். தேசிய சக்திகளால் பெண்கள், முஸ்லிம்கள், தலித்துகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைக்கு உதாரணம். இதனைத் தடுத்து மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை, அரசியலில் தங்களுக்கு ஆதரவு அளிப்போரை பாதுகாப்பது மட்டுமே கடமையல்ல என்று காட்டமாக முடித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.