பிகார் காப்பகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு சிறுமிகள் ஆளாக்கப்பட்ட சம்பவத்தை எதிர்த்து தில்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.
பிகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்டத்தில் அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ) ஒன்று காப்பகத்தை நடத்தி வந்தது. மும்பையைச் சேர்ந்த நிறுவனம் அங்கு ஆய்வு மேற்கொண்டபோது, அங்கிருந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை மாநில அரசு அமைத்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்த காரணமாக இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி மாநில அரசு வழக்கை அவர்களிடம் ஒப்படைத்தது.
இந்த சம்பவம் அரசு சாரா காப்பகத்தில் நடந்ததால் அரசு குற்றவாளிகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தனர். பிகார் மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி சார்பாக தில்லியின் ஜந்தர் மந்தரில் இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி சனிக்கிழமை தர்ணா போராட்டம் நடத்தினார்.
இந்த போராட்டத்துக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பை ஏற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அதில் பங்கேற்றனர்
அங்கு ராகுல் காந்தி பேசுகையில்,
"நமது நாட்டில் உள்ள பெண்களுக்காக நாம் இங்கு கூடியுள்ளோம். அவர்களுடன் நாம் நிற்க வேண்டும். இது அவமானத்துக்குரிய செயலாக நிதிஷ் குமார் உணர்ந்தால் அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.