உத்தரப் பிரதேச மாநிலத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சட்டப் படிப்பு மாணவர் ஒருவர் 4 பேர் கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, சக மாணவர்கள் திங்கள்கிழமை நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
தலித் மாணவர் கொலைக்கு, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ வாதி தலைவர் அகிலேஷ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், அலாகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு பயின்று வந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த திலீப் சரோஜ் என்ற மாணவர், அங்குள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றில் வெள்ளிக்கிழமை இரவு 4 பேர் கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டார். இதையடுத்து, கோமா நிலைக்குச் சென்ற அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.
இதனிடையே, மாணவர் தாக்கப்படும் காட்சிகள் அடங்கிய விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, திலீப்பை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்; அவரது குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, அலாகாபாத் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி சக மாண
வர்கள் திங்கள்கிழமை பேரணி நடத்தினர்.
அப்போது, திடீரென வன்முறை வெடித்தது. போலீஸார் மீது கற்கள் வீசப்பட்டன. பேருந்து ஒன்றுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். இதைத் தொடர்ந்து, அலாகாபாதில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
ஒருவர் கைது: இதனிடையே, மாணவர் கொலை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இப்புகாரை கையாள்வதில் அலட்சியம் காட்டியதாக காவல்துறையினர் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மாயாவதி, அகிலேஷ் கண்டனம்: தலித் மாணவர் கொலைக்கு, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ வாதி தலைவர் அகிலேஷ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மாயாவதி வெளியிட்ட அறிக்கையில், "உ.பி.யில் தலித் மாணவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. பாஜகவின் ஜாதிய அரசியலும், வெறுப்புணர்வு பிரசாரமுமே இந்த நிலைக்கு காரணம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகிலேஷ் கூறுகையில், "சமூக விரோதிகளின் கையில் உ.பி. சிக்கி தவிப்பதையே மேற்கண்ட சம்பவம் வெளிக்காட்டுகிறது. கொலையான மாணவரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்' என்றார்.
மேலவையில் அமளி: தலித் மாணவர் கொலை குறித்தும், சமாஜவாதி கட்சி பற்றி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாகவும் உத்தரப் பிரதேச சட்ட மேலவையில் அக்கட்சி உறுப்பினர்கள் திங்கள்கிழமை பிரச்னை எழுப்பினர்.
அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்ட அவர்கள், முதல்வர் மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி கோஷமிட்டனர். ஒரு சில உறுப்பினர்கள், காகிதத்தை சுருட்டி அவைத் தலைவரை நோக்கி வீசினர். அவற்றை, அவைக் காவலர்கள் தடுத்தனர். தொடர்ந்து அமளி நீடித்தால் அவை நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.