

ஆம் ஆத்மி கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் தலித், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் ஆசுதோஷ் கூறுகையில், "பிரகாஷ் ஜார்வால், அமானத்துல்லா கான் ஆகியோருக்கு எதிராக எந்தவித ஆதாரங்களையும் தில்லி தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் அளிக்கவில்லை. இருப்பினும் இரண்டு எம்எல்ஏக்களை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
இது ஆம் ஆத்மி கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும் என்றார்.
அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான சஞ்சய் சிங் கூறுகையில், "தில்லி தலைமைச் செயலகத்தில் அமைச்சர் இம்ரான் உசேன், தில்லி டயலாக் கமிஷன் துணைத் தலைவர் ஆஷிஷ் கேதன் ஆகியோர் தாக்கப்பட்டதாக அளித்த புகார் மீது தில்லி போலீஸார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வீட்டில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 11 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
ஆனால், பிரகாஷ் ஜார்வால், அமானத்துல்லா கான் ஆகிய இருவர் மட்டும் ஏன் கைது செய்யப்பட்டுள்ளனர்?
தலித், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இரண்டு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.