புதுதில்லி: தில்லி முதல்வர் கேஜரிவால் இல்லத்தில் தலைமைச் செயலர் தாக்கப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சையினைத் தொடர்ந்து, இனி அலுவல் ரீதியான கூட்டங்களை நேரலையில் ஒளிபரப்பு செய்ய தில்லி அரசு முடிவு செய்துள்ளது.
தில்லி முதல்வர் கேஜரிவால் இல்லத்தில் கடந்த 19-ஆம் தேதி அலுவல் ரீதியான சந்திப்பு ஒன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தில்லி மாநில தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் கலந்துகொண்டார். அப்பொழுது இரண்டு ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் அவரைத் தாக்கியதாக காவல்த்துறையில் அவர் புகார் கொடுத்தார். தற்பொழுது அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இனி அலுவல் ரீதியான கூட்டங்களை நேரலையில் ஒளிபரப்பு செய்ய தில்லி அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அரசின் உயர் அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததாவது:
இனி அலுவல் ரீதியான கூட்டங்களை நேரலையில் ஒளிபரப்பு செய்ய தில்லி அரசு முடிவு செய்துள்ளது. இதனை இணையதளம் ஒன்றின் வழியாக அனைவரும் பார்க்கும் படி ஏற்பாடு செய்யப்படும்.
இதன் மூலம் கூட்டங்களில் மக்கள் பிரதிநிதிகளோ அல்லது அரசு அதிகாரிகளோ, யார் என்ன பேசுகிறார்கல் என்பது தெளிவாகத் தெரிய வரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆம் ஆத்மி அரசின் இந்த திட்டடமானது நடைமுறைப்படுத்தப்பட்டால், வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடர் நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கலாம்.