கட்செவி அஞ்சல்(வாட்ஸ்ஆப்) குழுவிலுள்ள ஒருவர் ஆட்சேபத்துக்குரிய கருத்தைப் பதிவிட்டதன் காரணமாக, அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்(அட்மின்) 5 மாதங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம், ராஜ்கர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவர், இந்திய தேசத்துக்கு எதிராக கட்செவி அஞ்சலில் கருத்து பதிவிட்டதாகப் பல்வேறு தரப்பினர் புகார் அளித்ததையடுத்து, பல்வேறு குற்றவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் அந்தச் சிறுவர் மீதும், அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான ஜூனைத் மேவ்(21) என்ற இளைஞர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, அவ்விருவரும் 5 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.
அந்தச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பட்டதையடுத்து, ஜூனைத் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், காவல் துறையினர் வழக்கின் விசாரணையை விரைந்து நடத்தி முடிக்காமல், காலதாமதம் செய்து வருவதால், கடந்த 5 மாதங்களாக ஜூனைத் சிறையில் தவித்து வருவதாக, அவரின் குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். மேலும், ஜூனைத் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவரை ஜாமீனில் எடுக்க முடியாத நிலை தொடர்வதாகவும், சிறையில் இருப்பதனால் அவரின் கல்லூரிப் படிப்பு பாதிக்கப்படுவதாகவும், அவரின் குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்தனர்.
இது குறித்து காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த காவல் துறையினர், இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









