பாலக்காடு: கேரளாவில் பழங்குடி கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவத்துக்காக ஏழு கிலோ மீட்டர் தொட்டிலில் தூக்கிச் செல்லப்பட்ட அவலம் நிகழ்ந்துள்ளது.
கேரளாவில் பாலக்காடுக்கு அருகில் அமைந்துள்ளது அட்டப்பாடி. இதனையொட்டியுள்ள வனப்பகுதியின் உள்ளே கொட்டாதாரா பழங்குடி இன மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கான மருத்துவமனை அட்டப்பாடியில் அமைந்துள்ளது. குடியிருப்பிலிருந்து இங்கு வந்து சேர்வதற்கு என்று முறையான பாதைகள் கிடையாது.அத்துடன் குறுக்கிடும் ஆற்றைக் சில இடங்களில் கடக்க என்று சாதாரண மூங்கில் பாலங்கள் மட்டுமே உள்ளது.
இந்நிலையில் இந்தப் பகுதியில் பழங்குடி கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவத்துக்காக ஏழு கிலோ மீட்டர் தொட்டிலில் தூக்கிச் செல்லப்பட்ட அவலம் நிகழ்ந்துள்ளது.
இந்தப் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு நேற்று பிரசவ வலி எடுத்தது. அவரை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதற்காக இங்குள்ளவர்கள் சோர்ந்து விடவில்லை. உடனடியாக மரக் கிளை ஒன்றை வெட்டி அதன்மீது போர்வையை இறுக்கிக் கட்டி தொட்டில் போன்ற அமைப்பை உருவாக்கினார்கள்.
அதற்குள் அந்த பெண்ணை வைத்து, அதனைச் சுமந்து கொண்டு சுமார் 7 கி.மீ தூரம் மலைப்பாதைகளில் பயணித்து, அவர்கள் அட்டப்பாடி வந்து சேர்ந்தனர். பின்னர் சற்றுத் தொலைவில் உள்ள பழங்குடி மக்களுக்கான மருத்துவமனையில் அப்பெண்ணை கொண்டு சேர்த்தனர். அங்கு அப்பெண் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
இந்த சம்பவம் புதனன்று கேரள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதுடன், சமூக ஊடங்களிலும் வைரலாகியது.