வெளிநாடுகளில் உள்ள மசூதிகளுக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடியிடம், உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு வர நேரமில்லை என்று விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் மூத்த தலைவர் பிரவீண் தொகாடியா குற்றம்சாட்டியுள்ளார்.
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தர்ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத் எனும் புதிய அரசியல் அமைப்பை தொகாடியா அண்மையில் தொடங்கினார்.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னௌவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
வெளிநாடுகளில் உள்ள மசூதிகளுக்கு செல்ல பிரதமர் மோடிக்கு நேரம் இருக்கிறது. ஆனால், அயோத்திக்கு வருவதற்கும், அங்குள்ள ராம்லாலா கோயிலில் வழிபாடு நடத்துவதற்கும் மட்டும் அவரிடம் நேரம் இல்லை. அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டுவதற்கு எந்தவித நடவடிக்கையையும் மோடி அரசு எடுக்கவில்லை.
அயோத்தி, மதுரா, காசி ஆகிய இடங்களில் கோயில்களை கட்டுவது தொடர்பாக சட்டமியற்றாமல், அவர்கள் கோடிக்கணக்கான ஹிந்துக்களை ஏமாற்றி விட்டனர்.
மத்திய அரசு பிற பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது எனில், கோயில்கள் கட்டுவது தொடர்பான மசோதாவை நான் தயாரித்து தருகிறேன். அதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து மத்திய அரசு மசோதாவாக நிறைவேற்றலாம்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டக்கோரி, லக்னௌவில் இருந்து அயோத்திக்கு பேரணி நடத்துவதற்கு எங்கள் அமைப்பு திட்டமிட்டுள்ளது. அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டக்கோரி, கையெழுத்து இயக்கத்தையும் எங்களது அமைப்பு தொடங்கவுள்ளது.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற பாஜகவின் கோஷத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஹிந்துக்களின் வளர்ச்சி மீதே எனக்கு நம்பிக்கை உள்ளது. எனது அமைப்பில் இருப்போர் வேண்டுமானால், புதியவர்களாக இருக்கலாம். ஆனால், ஹிந்துக்களின் உரிமைகளுக்காக அவர்கள் மிகவும் தீவிரத்துடன் போராடக் கூடியவர்கள் என்றார் பிரவீண் தொகாடியா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










