ஜம்மு: கதுவா சம்பவம் ஜம்மு காஷ்மீர் மக்களை அவமதிக்கும் வகையில் செய்யப்பட்ட சதித்திட்டம் என்ற பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ லால் சிங் பேச்சால் சர்ச்சை உருவாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பா.ஜனதாவினர் தொடக்கம் முதலே ஆதரவாக உள்ளனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுப்பப்பட்டு வந்தது.
அதேசமயம் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டத்தில் பா.ஜனதா தலைவர்கள் கலந்து கொண்டனர். இதன் காரணமாக அவர்கள் அமைச்சரவையில் இருந்து விலகும் நிலை உண்டானது.
இந்நிலையில் கதுவா சம்பவம் ஜம்மு காஷ்மீர் மக்களை அவமதிக்கும் வகையில் செய்யப்பட்ட சதித்திட்டம் என்று பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ லால் சிங் பேச்சால் சர்ச்சை உருவாகியுள்ளது.
குற்றவாளிகளுக்கு ஆதரவாக போராடியவர்களின் ஒருவரும், அமைச்சரவில் இருந்து விலகியவருமான பா.ஜனதா எம்.எல்.ஏ லால் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'கதுவா சம்பவம் ஜம்மு காஷ்மீர் மக்களை அவமதிக்கும் வகையில் செய்யப்பட்ட சதித்திட்டம்' என்று குற்றம் சாட்டி உள்ளார். அத்துடன் இந்த வழக்கில் சிபிஐ விசாரணையை வேண்டாம் என்பவர்களிடம், 'சிபிஐ என்ன பாகிஸ்தான் நாட்டு விசாரணை ஆணையமா என்ற கேள்வியை கேட்க விரும்புகிறேன்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.