புது தில்லி: ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி முக்கியம்; ஆனால் பொதுமக்கள் நலன் என்பது தலையாயது என்று ரிசர்வ் வங்கி சர்ச்சை தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
தில்லியில் கடந்த வாரம் நடைபெற்ற தொழிலதிபர்கள் பங்கேற்ற கூட்டம் ஒன்றில் பேசிய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரல் ஆச்சார்யா, ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் அரசு தலையிடுவது பொருளாதாரப் பேரழிவுக்கு வித்திடும் எனத் தெரிவித்தார்.
விரைவில் நடைபெறவுள்ள ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுக் கடன் வழங்குவதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்திச் செயல்படுமாறு மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்திஇருந்தது. இதை மனத்தில் வைத்தே ஆச்சார்யா இவ்வாறு பேசியதாகக் கூறப்படுகிறது.
மத்திய அரசுடனான கருத்து வேறுபாட்டை ரிசர்வ் வங்கித் துணை ஆளுநர் இவ்வாறு வெளிப்படையாகப் பேசியது அதிருப்தி அளிப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன் எதிரொலியாக பொது நலன் சார்ந்த விஷயங்களில் ரிசர்வ் வங்கி ஆளுநரோடு விவாதித்து அவருக்கு உத்தரவிடும், ரிசர்வ் வங்கி நடைமுறைச் சட்டத்தின் விதி 7-ஐ பயன்படுத்தி மத்திய அரசு உத்தரவிட உள்ளதாக தகவல்கள் வெளியானது.
அதே சமயம் மத்திய அரசின் நெருக்குதல் காரணமாக ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும் தில்லி வட்டாரங்களில் பேசப்பட்டது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி முக்கியம்; ஆனால் பொதுமக்கள் நலன் என்பது தலையாயது என்று ரிசர்வ் வங்கி சர்ச்சை தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
இதுதொடர்பாக நிதியமைச்சகத்தின் சார்பில் புதனன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரிசர்வ் வங்கி நடைமுறைச் சட்டத்தின் படி, அதன் தன்னாட்சி என்பது மிக முக்கியமான ஒன்று மற்றும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓரு ஆட்சித் தேவையாகும். இந்தியாவில் இருந்த அரசுகள் அதனை மதித்து வளர்த்து வந்துள்ளன.
மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் பொது மக்கள் நலன் கருதியும், இந்திய பொருளாதாரத்தின் தேவைகளைக் கருதியும் செயல்பட வேண்டி வரும். அதற்காக பல்வேறு ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.
மத்திய அரசு ஒருபோதும் இத்தகைய ஆலோசனைகள் குறித்த தகவல்களை வெளியில் சொல்வதில்லை. இறுதி முடிவு மட்டுமே மக்களுக்குத் தெரிவிக்கப்படும்.
அரசானது இத்தகைய ஆலோசனைக் கூட்டங்களில் குறிப்பிட்ட விஷயம் குறித்த தன்னுடைய கருதுகோள்களை முன்வைக்கும். அத்துடன் சாத்தியமுள்ள தீர்வுகளையும் முன்வைக்கும். அதை இனியும் தொடர்ந்து செய்யத்தான் போகிறது. ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி முக்கியம்; ஆனால் பொதுமக்கள் நலன் என்பது தலையாயது
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.