போபால்: மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் சாத்வி பிராக்யா தாகுர் பாஜகவில் இணைந்ததை அடுத்து, போபாலில் போட்டியிடும் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங்கை எதிர்த்துப் போட்டியிடும் 48 வயதாகும் சாத்வி செய்தியாளர்களை சந்தித்த போது கதறி அழுதார்.
ஜாமீனில் வெளியே இருக்கும் சாத்வி, நேற்று நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் சட்டவிரோதமாக தான் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், விசாரணையின் போது தன்னை காவலர்கள் கடுமையாக அடித்து உதைத்ததாகவும் கூறினார்.
மிகப்பெரிய பெல்டால் தன்னை அடித்துத் துன்புறுத்தினார்கள். சட்டவிரோதமாக 13 நாட்கள் தன்னை அடைத்துவைத்து காவல்துறையினர் அடித்து சித்ரவதை செய்து விசாரணை நடத்தியதாகவும், முஸ்லிம் மக்களைக் கொல்ல குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக ஒப்புக் கொள்ளுமாறு அடித்து துன்புறுத்தினர் என்றும் கூறினார்.
எனது வலியை நான் உங்களிடம் கூறவில்லை, எனக்கு நேர்ந்தது போன்ற ஒரு துயரம் வேறு யாருக்கும் நேரக் கூடாது என்பதற்காகவே கூறுகிறேன் என்று சொல்ல கதறி அழுதார் சாத்வி.