உத்தரப்பிரதேசத்தில் பத்திரிக்கையாளர் மற்றும் அவரது சகோதரர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சஹாரன்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த ஆஷிஷ் ஜன்வானி, 'டெய்னிக் ஜக்ரன்' என்ற ஹிந்தி பத்திரிகையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ஆஷிஷ் மற்றும் அவரது சகோதரரும் இன்று மர்மமான முறையில் வீட்டில் இறந்த நிலையில் கிடந்தனர். பின்னர் இது தொடர்பாக, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆஷிஷ் வசித்து வரும் தெருவில் மஹிபால் என்பவர் பால் விற்பனையாளராக இருக்கிறார். இவர், மாடுகளின் சாணங்களை ஆஷிஷின் வீட்டின் அருகே தொடர்ந்து கொட்டி வந்ததால், ஆஷிஷ் மற்றும் மஹிபாலுக்கும் இடையே தொடர்ந்து சண்டை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, மஹிபால் இந்த கொலையை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக விசாரிக்க போலீசார் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆஷிஷின் கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவரது பெற்றோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.