ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு தொடர்பாக மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ), அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம் தொடர்புடைய வழக்கில் இருந்து முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும், சன் குழும நிறுவனங்களின் தலைவருமான கலாநிதி மாறன் ஆகியோரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017, பிப்ரவரி 2-இல் விடுவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவை தனித் தனியாக மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தன.
இந்த மனுக்கள் தில்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது இவ்வழக்கில் சிபிஐ அவகாசம் கோரியதால் விசாரணை அக்டோபர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.