ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

மத்தியப் பிரதேசத்தில் என்ஆர்சி, சிஏஏ அமல்படுத்தப்படாது: முதல்வர் கமல்நாத்

காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் வரை மத்தியப் பிரதேசத்தில் தேசியக் குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படாது என அம்மாநில முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ள

News image
Updated On :25 டிசம்பர் 2019, 1:11 pm

DIN


காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் வரை மத்தியப் பிரதேசத்தில் தேசியக் குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படாது என அம்மாநில முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் அம்மாநில முதல்வர் கமல்நாத் தலைமையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் என்ஆர்சி-க்கு எதிராக இன்று (புதன்கிழமை) பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் அமைச்சர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.

இதையடுத்து, மத்தியப் பிரதேசத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் என்ஆர்சி அமல்படுத்தப்படாது என்பதை தெளிவுபடுத்திப் பேசிய கமல்நாத்,

"அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பன்முகத்தன்மை கலாசாரத்தினால் உலகளவில் இந்தியா அறியப்படுகிறது. ஆனால், என்ஆர்சி என்பது இந்தியாவின் இந்தத் தனித்துவங்கள் மீதான தாக்குதலாகும். 40 ஆண்டுகளாக அரசியலில் எம்எல்ஏ-வாக உள்ளேன். ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் மீது தாக்குதலைத் தொடுக்கும் என்ஆர்சி மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்ற சட்டங்களை நான் பார்த்ததே கிடையாது.

இதுகுறித்து பிரதமரும், உள்துறை அமைச்சரும் என்ன சொல்கிறார்கள் என்பது கேள்வி அல்ல. அவர்கள் சொல்லாதது எது என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. இந்த இரண்டு சட்டங்களில் என்ன எழுதியிருக்கிறது என்பது கேள்வி அல்ல. இதில் எழுதப்படாமல் இருப்பது என்ன என்பதுதான் கேள்வி. இந்தச் சட்டங்கள் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படும் என்பது குறித்துதான் நாங்கள் பேசி வருகிறோம். இதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் திட்டத்தைதான் நாங்கள் எதிர்க்கிறோம்.

தற்போது நாட்டின் பொருளாதாரம் மோசமாக உள்ளது. மக்கள் வேலைகளை இழக்கின்றனர். விவசாயிகளுக்கு விளைச்சலுக்கு ஏற்ற தகுந்த விலை கிடைப்பதில்லை. ஆனால், மத்திய அரசு இதில் கவனம் செலுத்தாமல், மக்களின் கவனத்தை என்ஆர்சி மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மீது திருப்புகிறது.

என்ஆர்சி மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு மட்டுமே காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவிக்கிறது. தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஒன்றும் புதிதல்ல. காங்கிரஸ் கட்சியும் அதற்கு ஆதரவையே தெரிவிக்கிறது. ஆனால், அதை என்ஆர்சியுடன் இணைக்கக் கூடாது" என்றார்.

என்ஆர்சி மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் முதலில் அதில் என்ன இருக்கிறது என்பதைப் படித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்ற பிரதமர் மோடியின் விமரிசனத்துக்குப் பதிலளித்த கமல்நாத், "மோடி எங்களைப் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று நினைக்கிறாரா? என்ஆர்சி மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் பின்னணியில் இருக்கும் அனைத்துத் திட்டங்களும், உள்நோக்கமும் எங்களுக்குத் தெரியும்" என்றார்.

முன்னதாக, மேற்கு வங்கம் மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களில் சிஏஏ அமல்படுத்தப்படாது என அம்மாநில முதல்வர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.