மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி கொண்டுவர வேண்டிய தேவை இருக்கிறது: மிரட்டும் மத்திய அமைச்சர் 

மேற்கு வங்க மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி கொண்டுவர வேண்டிய தேவை இருக்கிறது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி கொண்டுவர வேண்டிய தேவை இருக்கிறது: மிரட்டும் மத்திய அமைச்சர் 
Published on
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி கொண்டுவர வேண்டிய தேவை இருக்கிறது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவைச் சேர்ந்த சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி வழக்கில், சிறப்பு புலனாய்வுக் குழுவின் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் இல்லத்திற்கு ஞாயிறன்று சிபிஐ அதிகாரிகள் சென்றனர்.

அப்போது அங்கே கொல்கத்தா போலீசாருக்கும், சிபிஐ அதிகாரிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய அரசின் எதேச்சதிகார போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது மோடி அரசு மேற்கு வங்கத்தில் அவசர நிலை கொண்டு வர விரும்புவதாக அவர் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி கொண்டுவர வேண்டிய தேவை இருக்கிறது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் திங்களன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி மாநிலத்தில் அவசரநிலை ஏதும் கொண்டுவரவில்லை. ஆனால், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிதான் அவசரநிலையை ஏற்படுத்தியுள்ளார். சிபிஐ நடவடிக்கையில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளவே மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நாங்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எச்சரிக்கிறோம். மேற்கு வங்கத்தில் உள்ள இந்த  அவசரநிலைக்கு எதிராக நாங்கள் போராடுவோம். முன்னாள் பிரதமர்  இந்திரா காந்தி நாட்டில் அவசரநிலை கொண்டுவந்தபோது, அதை எதிர்த்து நாங்கள் போராடி வென்றோம். அதேபோல திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும் தோற்கடிப்போம்.

மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சிகள் எந்தவிதமான பேரணி நடத்தினாலும் தடை விதிக்கப்படுகிறது, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

சமீபத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் ஹெலிகாப்டர்கள் இங்கு தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது.

தொடர்ந்து அரசியலமைப்புச் சட்ட உத்தரவுகள் அனைத்தும் மேற்கு வங்கத்தில் மீறப்படுகிறது. இதனால், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டுவர வேண்டிய தேவை இருக்கிறது. இதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

இவ்வாறு ஜவடேகர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com