புது தில்லி: எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் செவ்வாயன்று நிறைவேறியது.
மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில் செவ்வாயன்று மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவைத் மத்திய சட்ட அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்
மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினரான தேனி ஓ.பி.ரவீந்திரநாத், முத்தலாக் சட்டத்தை ஆதரித்து பேசி வாக்களித்தார். இது தமிழகத்தில் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை அதிமுக மீது ஏற்படுத்தி இருந்தது.
அதேசமயம் செவ்வாயன்று மாநிலங்களவையில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட போது, நவநீதகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் 'இந்த மசோதாவின் ஒரு சில பிரிவுகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இது உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. இம்மசோதாவானது சமூகத்தில் உண்டாக்க கூடிய விளைவுகளையும் கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற சிறப்புக்குழுவுக்கு இதனை அனுப்ப வேண்டும' என்று வலியுறுத்தி விட்டு, வெளிநடப்பு செய்தனர்.
இவர்களைப் போல ஐக்கிய ஜனதா தள உறுப்பினர்களும் மசோதா குறித்த வாக்கெடுப்பில் பங்குபெறாமல் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் செவ்வாயன்று நிறைவேறியது.
மசோதா மீதான விவாதம் நிறைவடைந்த பின்னர் அதன்மீதான ஓட்டெடுப்பு துவங்கியது. முன்பு போல் மின்னணு வாக்குப்பதிவு இல்லாமல் வாக்குச் சீட்டு முறையில் ஓட்டெடுப்பு நடைபெற்றது. காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட காட்சிகள் மசோதாவிற்கு எதிராக வாக்களித்தன.
இறுதியில் மசோதாவிற்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் பதிவாகின. இறுதியில் மக்களவையைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் இம்மசோதா நிறைவேறியுள்ளது.