முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனக்கு தில்லியில் அளிக்கப்பட்டிருந்த அரசு குடியிருப்பை சனிக்கிழமை காலி செய்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது,
நான் எனக்கு வழங்கப்பட்டிருந்த அரசு குடியிருப்பில் இருந்து வெளியேறுகிறேன். எனவே இனி இந்த விலாசம் மற்றும் தொலைபேசி ஆகியவற்றின் மூலம் என்னை யாரும் தொடர்புகொள்ள முயற்சிக்க வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, உடல்நிலை காரணமாக நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுஷ்மா ஸ்வராஜ் போட்டியிடவில்லை. மேலும் ஆந்திர ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் வதந்தி மட்டுமே என்றும் சுஷ்மா தெளிவுபடுத்தினார்.
கடந்த 2014 மத்திய அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்த சுஷ்மா ஸ்வராஜ், தனது பணிகளுக்காக பாராட்டு பெற்றவர். ட்விட்டரிலும் இயங்கி அதன்மூலமும் மக்களின் குறைகளைக் கேட்டறிந்து நலத்திட்டங்களை மேற்கொண்டார். இந்த காலகட்டத்தில் வெளியுறவுத்துறை செயலராக செயல்பட்டு வந்த ஜெய்சங்கர் தற்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
பல அரசியல் தலைவர்கள் தங்களின் பதவிக்காலம் முடிந்த பின்னரும், அரசு சலுகைகளை பெற்று வரும் சூழலில், சுஷ்மா ஸ்வராஜின் இந்த செயல் மக்களிடையே பெரும் வரவேற்பையும், பாராட்டுதலையும் பெற்று வருகிறது.