சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரை ராகுல் அவமதித்ததன் விலையை தான் ராஜீவ் மூலம் கொடுத்துக்கொண்டிருக்கிறார் என்று சிவ சேனை தெரிவித்தது.
பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் பிரதமர் ராஜீவை விமர்சித்ததற்கு அவருடைய மகனும், காங்கிரஸ் தலைவருமான ராகுல், கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார். இதுகுறித்து சிவ சேனையின் சாம்னா பத்திரிகை வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
பொது இடங்களில் பிரதமர் நரேந்திர மோடியை திருடன் என்று ராகுல் விமர்சித்து வருகிறார். அந்த விமர்சனத்துக்காக பிரதமர் அவருக்கு தேநீர் விருந்து அளிப்பார் என்றா எதிர்பார்க்க முடியும். ஒருவேளை ராஜீவ் தொடர்பான பிரதமரின் விமர்சனம் தவறென்றால், சுதந்திரப் போராட்ட வீரர் சாவர்க்கர் குறித்து ராகுல் பேசியதற்கெல்லாம் தகுந்த விலை கொடுத்தாக வேண்டும்.
ஆங்கிலேயர்களிடம் சரணடைந்து சாவர்க்கர் தன்னை விடுவித்துக்கொண்டார் என்று ராகுல் விமர்சித்தது, ஒட்டுமொத்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது ஏற்பட்ட அவமதிப்பாகும். ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட போது சிறுவர்களாக இருந்த ராகுலும், பிரியங்காவும் தந்தையை இழந்ததில் அனைவருக்கும் வருத்தம் தான். ஆனால், எவ்வித போராட்டமும், நாட்டுக்கான தியாகமும் செய்யாமல் நேரடியாக அரசியலுக்கு அழைத்துவரப்பட்டவர் தான் ராஜீவ். எனவே தியாகம் என்ற வார்த்தையே ராஜீவுக்கு பொருந்தாது.
ஆனால், தன்னுடைய 14-ஆவது வயது முதல் நாட்டின் சுதந்திரத்துக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்தவர் வீர சாவர்க்கர். அவர் தனது உயிரை இந்நாட்டுக்காக தியாகம் செய்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.