மக்களவை தேர்தலில் போபால் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் வாக்களிக்கவில்லை.
மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங், போபால் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூரை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், போபால் தொகுதியில் இருந்து 130 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ராஜ்கர் மாவட்டத்தில் திக்விஜய் சிங் வாக்கு உள்ளது. ஆனால், அவர் அங்கு சென்று வாக்களிக்கத் தவறிவிட்டார். இதுகுறித்து திக்விஜய் சிங் அளித்த விளக்கத்தில்,
நான் ராஜ்கர் சென்று வாக்களிக்காததற்கு வருந்துகிறேன். அடுத்தமுறை போபாலில் எனது பெயரை நிச்சயம் பதிவு செய்வேன் என்று கூறியவர், மக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை காலை போபாலில் உள்ள கோயிலில் சிறப்பு பிரார்த்தனைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திக்விஜய் சிங், எப்படியாவது முயற்சி செய்து எனது வாக்கை பதிவு செய்வேன் என்று உத்தரவாதம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.