புது தில்லி: நாங்கள் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில்தான இருப்போம் என்று பாஜகவுடன் உரசலா என்று எழுந்த கேள்விகளுக்கு பிகார் முதலவர் நிதிஷ்குமார் பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்றதையடுத்த மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. பிரதமர் மோடி வியாழனன்று இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் என்று மொத்தம் 57 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
பாஜவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதாதள தலைவரும், பிகார் முதல்வருமான நிதிஷ்குமார் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டார். ஆனால் அக்கட்சி இந்த அமைச்சரவையில் பங்கேற்கவில்லை. இதன்காரணமாக இரு கட்சிகளிடையே உரசல் என்று பேச்சு எழுந்தது.
இந்நிலையில் நாங்கள் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில்தான இருப்போம் என்று பாஜகவுடன் உரசலா என்று எழுந்த கேள்விகளுக்கு பிகார் முதலவர் நிதிஷ்குமார் பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளியன்று தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
நாங்கள் பாஜவுடன்தான் உள்ளோம். தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் நீடிக்கிறோம், கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு கேபினட் அமைச்சர் பதவி வழங்க பாஜக முன்வந்தது. ஆனால் அதனை எங்கள் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதை வெறுமனே வெளி காட்சிக்கான ஒன்று என கருதினார்கள். எனவே நாங்கள் அமைச்சரவையில் பங்கேற்கவில்லை.
நாங்கள் அரசில் எந்தப் பதவியோ அல்லது இலாகவோ கோரவில்லை. எங்களுக்கு எந்த விதமான வருத்தமோ அல்லது கோபமோ இல்லை. நாங்கள் தொடர்ந்து மத்திய அரசை ஆதரிக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.