ஜெய்ப்பூர்: சாலை விதிகளை மீறுவோருக்கான அபராதத்தை பல மடங்கு உயர்த்தி மோட்டார் வாகனச் சட்டம் திருத்தியமைக்கப்பட்டது.
இதையடுத்து, ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுவோரிடம் தற்போது ரூ.1000 அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் இந்த அளவுக்கு அபராதக் கட்டணம் உயர்த்தப்பட்டதால் கடும் அதிருப்தியில் உறைந்து போயிருக்கிறார்கள் வாகன ஓட்டிகள்.
புதிய கட்டண உயர்வு இன்னும் ராஜஸ்தான் மாநிலத்தில் அமல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில், ராஜஸ்தான் அரசு ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டி ரூ.1000ஐ அபராதமாக செலுத்துவோருக்கு செல்லானுடன், ஐஎஸ்ஐ முத்திரைக் குத்தப்பட்ட ஹெல்மெட்டையும் போக்குவரத்துக் காவலர்கள் வழங்க வேண்டும் என்பதுதான்.
அதே சமயம், புதிய கட்டணத்தை உடனடியாக மாநிலத்தில் அறிமுகப்படுத்த வேண்டாம் என்றும், முதலில் போக்குவரத்து விதிகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.