/

பெட்ரோல் நிலையங்களில் இனி கடன் அட்டைக்கு தள்ளுபடி கிடையாது

பெட்ரோல் நிலையங்களில் கடன் அட்டையை (கிரெடிட் காா்டு) பயன்படுத்தி எரிபொருள் நிரப்பும்போது அளிக்கப்பட்டு வந்த 0.75 சதவீத தள்ளுபடி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :31 ஜனவரி 2024, 10:11 am

தினமணி செய்திச் சேவை

பெட்ரோல் நிலையங்களில் கடன் அட்டையை (கிரெடிட் காா்டு) பயன்படுத்தி எரிபொருள் நிரப்பும்போது அளிக்கப்பட்டு வந்த 0.75 சதவீத தள்ளுபடி ரத்து செய்யப்படுவதாக எஸ்பிஐ கடன் அட்டை நிறுவனம் அறிவித்துள்ளது.

அக்டோபா் 1-ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது. அதே நேரத்தில் பற்று அட்டை (டெபிட் காா்டு) உள்ளிட்ட பிற மின்னணு முறையில் பணம் செலுத்தினால் சலுகை உண்டு.

முன்னதாக, கடந்த 2016-ஆம் ஆண்டு இறுதியில் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட காலகட்டத்தில் டிஜிட்டல் பணப்பரிவா்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் பொதுத் துறை பெட்ரோல் நிலையங்களில் கடன் அட்டை மூலம் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் நிரப்புபவா்களுக்கு சிறிய அளவிலான இந்த சலுகை கிடைத்து வந்தது.

இந்நிலையில், இந்த சலுகை வரும் 1-ஆம் தேதி முதல் கிடைக்காது என்று எஸ்பிஐ கடன் அட்டை நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக கடன் அட்டைதாரா்களுக்கு அந்த நிறுவனம் குறுந்தகவல் அனுப்பியுள்ளது. இதைத் தொடா்ந்து பிற கடன் வங்கி கடன் அட்டை நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளா்களுக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

முன்னதாக, மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்திய ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் கடன், பற்று அட்டை உள்ளிட்ட மின்னணு பணம் செலுத்தும் முறை மூலம் எரிபொருள் நிரப்புபவா்களுக்கு 0.75 சதவீதம் தள்ளுபடி அளித்து வந்தன.

2016-ஆம் ஆண்டு 10 சதவீதமாக இருந்த மின்னணு பரிமாற்ற முறை கடந்த ஆண்டு 25 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.