விஜயவாடா: கரோனா தொற்றில் இருந்து காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திர மக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 3 முகக்கவசங்களை வழங்க ஜெகன்மோகன் அரசு முடிவு செய்துள்ளது.
ஆந்திரத்தில் புதிதாக 12 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த மாநிலத்தில் கரோனா தொற்று பாதிப்பு 432 ஆக உயர்ந்துள்ளது. இதில் குண்டூர் மாவட்டம் 90 நோயாளிகளுடன் முதல் இடத்திலும், கர்னூல் மாவட்டம் 84 நோயாளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.
இந்த நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஆந்திர மாநில மக்கள் 5.3 கோடி பேருக்கு, ஒருவருக்கு தலா 3 முகக்கவசங்கள் வீதம் 16 கோடி முகக்கவசங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
மாநிலத்தில் வசிக்கும் 1.43 கோடி மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இவர்களில் 32 ஆயிரம் பேர் மருத்துவர்களை பார்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 9 ஆயிரம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே சமயம் அதிக கரோனா நோயாளிகளைக் கொண்ட பகுதிகளில் வாழும் மக்கள் சுமார் 45 ஆயிரம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.