கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் மக்கள் மிகப்பெரிய அளவில் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளனர்.
உலக அளவில் கரோனாவால் லட்சக்கணக்கான இன்னுயிர்களை இழந்து, ஏராளமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
உலகையே புரட்டிப் போட்டிருக்கும் இந்த கரோனா தொற்றால் பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு நடவடிக்கையால் மறைமுகமாக சில நல்ல விஷயங்களும் நடக்கத்தான் செய்கிறது.
பூமி.. இத்தனை ஆண்டு காலமாக மனிதர்கள் ஏற்படுத்திய பெருஞ்சேதத்தை இந்த ஒரு சில மாதக் காலத்தில் சரி செய்து, தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டு வருகிறது.
உயிரினங்களும் தாங்கள் வாழ்ந்து சுவைத்த பல விஷயங்களை மனிதர்களின் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அனுபவித்து வருகின்றன. இந்த பூமி எங்களுக்கும் சொந்தம் என்று கொண்டாடி மகிழ்கின்றன.
இதற்கிடையே, ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் மக்கள், வீட்டில் சமைக்கப்பட்ட சத்தான, சுத்தமான சாப்பாட்டை சாப்பிட்டு வருகிறார்கள். இதனால், வழக்கமாக கோடைக்காலத்தில் ஏற்படும் நோய்கள் பொதுமக்களை தாக்க வாய்ப்பில்லாமல் போகும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இதுவரை வெளி உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வயிற்றில் தொற்று, ஒவ்வாமை போன்ற பிரச்னைகளை சந்தித்து வந்தவர்களும் கூட தற்போது வீட்டில் சமைத்த உணவை உண்டு பலருக்கும் பல உடல் உபாதைகள் குறைந்திருக்கும், அல்லது முற்றிலும் சரியாகியிருக்கும்.
பொதுவாக வெளி உணவுகளை சாப்பிடும் போது ஏற்படும் காலரா, டைஃபாய்டு போன்ற நோய்கள் இந்த ஊரடங்கால் பரவ வாய்ப்பில்லை.
மேலும், கையை சுத்தமாக வைத்துக் கொண்டாலே பெரும்பாலான நோய்கள் வராது. கரோனா தொற்றால் தற்போது பொதுமக்கள் வெளியே சென்றுவந்தாலும் கையை சுத்தமாகக் கழுவுவதாலும் நோய்கள் பரவல் குறைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.