ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

தற்கொலை முடிவை முகநூலில் பதிவிட்டவரை துரிதமாக செயல்பட்டு மீட்ட காவல்துறை

கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை முகநூலில் பதிவிட்ட நபர் பற்றி ஐயர்லாந்தைச் சேர்ந்த முகநூல் ஊழியர் தில்லி காவல்துறைக்கு எச்சரிக்கை அனுப்பியதை அடுத்து, துரிதமாக செயல்பட்ட காவல்துறை, அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளது.

News image

தற்கொலை முடிவை முகநூலில் பதிவிட்டவரை துரிதமாக செயல்பட்டு மீட்ட காவல்துறை

Updated On :10 ஆகஸ்ட் 2020, 8:21 am

PTI

புது தில்லி: கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை முகநூலில் பதிவிட்ட நபர் பற்றி ஐயர்லாந்தைச் சேர்ந்த முகநூல் ஊழியர் தில்லி காவல்துறைக்கு எச்சரிக்கை அனுப்பியதை அடுத்து, துரிதமாக செயல்பட்ட காவல்துறை, அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளது.

27 வயது நபர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறி முகநூலில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த முகநூல் ஊழியர்கள் அவரைத் தொடர்பு கொள்ள செய்த முயற்சி பலனளிக்கவில்லை. உடனடியாக தில்லி காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

அந்த நபரின் தகவல்களை முகநூல் ஊழியர், தில்லி காவல்துறையிடம் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு அளித்தது முதல், அந்த நபரின் உயிரைக் காக்கும் பந்தயம் காவல்துறைக்குத் தொடங்கியது.

அந்த நபரின் தொலைபேசி எண்ணை ஆராய்ந்த போது அது கிழக்கு தில்லியைச் சேர்ந்த பெண் ஒருவரது என்று தெரிய வந்தது. உடனடியாக அந்த பெண்ணின் முகவரிக்கு காவல்துறையினர் சென்ற போது அவர் நலமாக இருந்தார். அங்குதான் ஒரு மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது.

விசாரணையில், அப்பெண்ணின் கணவர்தான் அந்த முகநூல் பக்கத்தை இயக்குவதாகவும், அவர் தன்னிடம் சண்டை போட்டுக் கொண்டு 2 வாரங்களுக்கு முன்பு மும்பை சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

உடனடியாக மும்பை காவல்துறைக்கு இந்த தகவல் அளிக்கப்பட்டது. அப்போது மணி இரவு 11. 

அந்த நபர் எங்கு தங்கியிருக்கிறார் என்பத கண்டறிவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது. மும்பை காவல்துறையினர் உடனடியாக அந்த நபரின் தாயை தொடர்பு கொண்டு, மகனை வாட்ஸ்அப் விடியோ காலில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால், அந்த தொடர்பை அவர் துண்டித்துவிட்டார். பிறகு வேறு ஒரு எண்ணில் இருந்து தாயை அழைத்துப் பேசினார். அப்போதுதான் அவர் எங்கிருக்கிறார் என்ற தகவலை காவல்துறையினர் பெற்றனர்.

உடனடியாக அந்த எண்ணுக்கு காவல்துறையினர் தொடர்பு கொண்டு, அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் அவருடன் செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவரது முகவரிக்கு காவல்துறையினர் சென்று அவரது தற்கொலை முயற்சியை தடுத்துநிறுத்திவிட்டனர்.

ஒரு சிறிய உணவகத்தில் பணியாற்றி வந்த அந்த நபர், பொது முடக்கத்தால்  வேலை இழந்து கையில் பணமில்லாமல் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானதாக காவல்துறையிடம் கூறியுள்ளார். புதிதாகப் பிறந்த குழந்தையை எவ்வாறு வளர்க்கப் போகிறேன் என்று தெரியாமல் மன அழுத்தத்துக்கு உள்ளாகி தற்கொலை  முடிவை எடுத்ததாகவும் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.