தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், விவசாயிகளுடன் மத்திய அமைச்சர்கள் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.
இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியாணா மாநில விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே 32 விவசாய சங்கங்களுடன் செவ்வாய்க்கிழமை அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேளாண் சட்டங்களில் உள்ள நிறை குறைகள் குறித்து ஆய்வு செய்ய குழுஅமைக்க வேண்டும் என்று அரசு சார்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் விவசாயிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று விவசாயிகளுடனான அரசின் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ளது.
தில்லி விஞ்ஞான் பவனில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான கூட்டத்தில் ஏராளமான விவசாய சங்கத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.