

விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை (திங்கள்கிழமை) ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தெரிவித்திருப்பதாவது:
"விவசாயிகளுக்கு ஆதரவாக ஆம் ஆத்மி நிர்வாகிகள், ஆதரவாளர்கள் மற்றும் மக்கள் நாளை ஒருநாள் உண்ணாவிரதம் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நானும் உண்ணாவிரதம் இருப்பேன்.
சில மத்திய அமைச்சர்களும், பாஜக தலைவர்களும் விவசாயிகளை தேச விரோதிகளாகக் கருதுகின்றனர். முன்னாள் ராணுவ வீரர்கள், தேசிய மற்றும் சர்வதேச வீரர்கள், பாடகர்கள், பிரபலங்கள், மருத்துவர்கள், வியாபாரிகள் எனப் பலர் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இவர்கள் அனைவரும் தேச விரோதிகளா என்று பாஜகவிடம் கேள்வியெழுப்ப விரும்புகிறேன்" என்றார் அவர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் மற்றும் மத்திய அரசுக்கிடையே நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகளில் முடிவு எட்டப்படவில்லை. சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது என விவசாயிகள் சனிக்கிழமை அறிவித்தனர்.
விவசாயிகளின் போராட்டம் இன்று 18-வது நாளை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.