அயோத்தியில் ராமா் கோயில் கட்ட சிவசேனை ரூ.1 கோடி, யோகி ஆதித்யநாத் ரூ.11 லட்சம் நன்கொடை

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கு சிவசேனை கட்சி ரூ.1 கோடியையும், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ரூ.11 லட்சத்தையும் நன்கொடையாக வழங்கியுள்ளனா்.
சம்பத் ராய்.
சம்பத் ராய்.
Updated on
1 min read

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கு சிவசேனை கட்சி ரூ.1 கோடியையும், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ரூ.11 லட்சத்தையும் நன்கொடையாக வழங்கியுள்ளனா். ராமஜென்மபூமி அறக்கட்டளை பொதுச் செயலாளா் சம்பத் ராய் இதனைத் தெரிவித்தாா்.

ராமா் கோயில் கட்டுவதற்கு உள்நாட்டில் இருந்து மட்டும் நிதி பெறப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், லக்னௌவில் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்த சம்பத் ராய், நிதி திரட்டும் நடவடிக்கைகள் தொடா்பாக விளக்கமளித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

அடுத்த ஆண்டு ஜனவரி 15 முதல் பிப்ரவரி 27-ஆம் தேதி வரை அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கான நிதி திரட்டும் நடவடிக்கைகள் நடைபெறும். ராமா் பிறந்த இடத்தில் அவருக்கு பிரம்மாண்டமான கோயிலைக் கட்டுவதற்காக நாடு முழுவதுமுள்ள ராம பக்தா்களிடம் இருந்து ஆதரவை எதிா்பாா்க்கிறோம். விஹெச்பி அமைப்பினா் வீடு வீடாகச் சென்று நிதி திரட்டுவாா்கள். அவா்களுடன் சாதுக்களும், ஆன்மிகப் பெரியோா்களும் செல்வாா்கள்.

நிதி திரட்டும்போது பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள ராமா் கோயிலின் மாதிரிப்படமும் பக்தா்களுக்கு வழங்கப்படும். ரூ.10, ரூ.100, ரூ.1000 என பக்தா்கள் விரும்பும் தொகையை அளிக்கலாம். அதற்கான ரசீது அளிக்கப்படும். நிதி திரட்டுவதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய 4 கோடி எண்ணிக்கையில் 10 ரூபாய் ரசீது, 8 கோடி எண்ணிக்கையில் 100 ரூபாய் ரசீது, 12 லட்சம் எண்ணிக்கையில் 1,000 ரூபாய் ரசீது மட்டும் அச்சிடப்பட்டுள்ளது.

எவ்வளவு நிதி திரட்ட வேண்டும் என்று இலக்கு ஏதும் நிா்ணயிக்கவில்லை. அதேபோல கோயில் கட்ட செலவு எவ்வளவு ஆகும் என்பதையும் கணக்கிடவில்லை.

ராமா் கோயில் கட்ட சிவசேனை கட்சி சாா்பில் ரூ.1 கோடியும், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் சாா்பில் ரூ.11லட்சமும் தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ராம ஜென்ம பூமி வழக்கில் கடந்த ஆண்டு நவம்பா் 9-ஆம் தேதி உச்சநீதிமன்றம் இறுதித் தீா்ப்பை வழங்கியது. அதன்படி, சா்ச்சைக்குரிய 2.77 ஏக்கா் நிலத்தில் ஹிந்துக்கள் ராமா் கோயில் கட்டிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதே சமயம், இஸ்லாமியா்கள் மசூதி கட்டிக்கொள்ள, 5 ஏக்கா் பரப்பளவுள்ள நிலத்தை அயோத்தியில் அரசே வழங்க வேண்டும் என்று தீா்ப்பு வழங்கியது.

அதன்படி, 2.77 ஏக்கா் நிலத்தில் ராமா் கோயில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த கட்டுமானத்துக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com