குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பாஜகவினர் வீடு தேடிச்சென்று பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மாணவர் சங்கத்தின் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இதற்கிடையே குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று நாடு முழுவதும் பாஜகவினர் வீடுதோறும் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். பெங்களூருவில் வசந்த் நகரில் முதல்வர் எடியூரப்பா வீடுகளுக்கு சென்று மக்களிடம் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அதேபோன்று நாக்பூரில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும், ஜெய்ப்பூரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.