குவாலியர்: முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாதவர்கள், தன்னார்வலர்களாக பணியமர்த்தப்படுவார்கள் என்று குவாலியரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, மருத்துவமனை மற்றும் காவல்துறை சோதனைச் சாவடிகளில் மூன்று நாள்களுக்கு தன்னார்வலர்களாகப் பணியாற்ற வைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரோனாவை ஒழிப்போம் என்ற விழிப்புணர்வு பிரசாரத்தின் ஒரு கட்டமாக ஞாயிறன்று மாவட்ட ஆட்சியர் கௌஷலேந்திர விக்ரம் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விதிகளை பின்பற்றாமல் சாலைகளில் செல்வோருக்கு அபராதம் மட்டும் அல்லாமல், கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைகளில் 3 நாள்களுக்கு தன்னார்வலர்களாகப் பணியாற்ற வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவாலியரில் நேற்று ஒரே நாளில் 51 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 528 ஆக உயர்ந்துள்ளது.