சச்சின் பைலட்டுக்கு காங்கிரஸில் நல்ல எதிர்காலம் உள்ளது: திக்விஜய் சிங்
சச்சின் பைலட் காங்கிரஸிலிருந்து வெளியேற வேண்டாம், கட்சியில் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.


சச்சின் பைலட் காங்கிரஸிலிருந்து வெளியேற வேண்டாம், கட்சியில் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே பிரச்னை நிலவி வருகிறது. இதைத் தொடர்ந்து, சச்சின் பைலட் துணை முதல்வர் மற்றும் மாநிலத் தலைவர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டார். எனினும், தான் பாஜகவில் இணையப்போவதில்லை என்று சச்சின் பைலட் தெரிவித்தார்.
இந்த குழப்பங்களுக்கு மத்தியில் மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
"ராஜஸ்தானில் நிலவி வரும் நெருக்கடி சூழலுக்குப் பின்னணியில் பாஜக இருக்கிறது.
உங்களுக்கு (பைலட்) வயது இருக்கிறது. அசோக் கெலாட் உங்களைக் காயப்படுத்தியிருக்கலாம். ஆனால், இதுபோன்ற பிரச்னைகள் அனைத்தையும் சமாதானமாக தீர்த்துக்கொள்ள வேண்டும். சிந்தியா செய்த தவறையே நீங்களும் செய்ய வேண்டும். பாஜகவை நம்ப முடியாது. வேறு கட்சியிலிருந்து பாஜகவுக்கு சென்ற யாருமே வெற்றி பெற்றதில்லை.
சச்சின் எனது மகன் மாதிரி. அவர் எனக்கு மரியாதை கொடுப்பார், எனக்கும் அவரைப் பிடிக்கும். நான் அவரை 3, 4 முறை அழைத்தேன், குறுஞ்செய்தியும் அனுப்பினேன். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. இதற்கு முன்பெல்லாம், உடனடியாக பதிலளிப்பார்.
லட்சியவாதியாக இருப்பது நல்லதுதான். லட்சியம் இல்லாமல் எப்படி முன்னோக்கி செல்வது. ஆனால் லட்சியத்துடன், நாட்டுக்கும், சித்தாந்தத்துக்கும், சார்ந்திருக்கும் அமைப்புக்கும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்.
அவர் புதிய கட்சி தொடங்கப்போவதாக கேள்விபட்டேன். அதன் தேவையென்ன? காங்கிரஸ் அவருக்கு எதுவுமே கொடுக்கவில்லையா? 26 வயதில் அவர் எம்பி ஆக்கப்பட்டார். 32 வயதில் மத்திய அமைச்சர், 34 வயதில் காங்கிரஸ் மாநிலத் தலைவர், மற்றும் 38 வயதில் துணை முதல்வர் பதவி. இன்னும் வேறு என்ன வேண்டும்? நேரம் அவர் பக்கம் உள்ளது.
பைலட்டுக்கு ஏதேனும் பிரச்னை இருந்தால், மாநிலத் தலைவராக கூட்டம் கூடி ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க காங்கிரஸ் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் மற்றும் ராஜஸ்தான் காங்கிரஸுக்கான மேலிடப் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டேவையும் கெலாட்டுடனான பேச்சுவார்த்தையின்போது அழைத்திருக்க வேண்டும்.
உங்களது எம்எல்ஏ-க்கள் மீது நம்பிக்கை இருந்தால், பிறகு ஏன் அவர்களில் 18-19 பேரை ஹரியாணாவின் மனேசரிலுள்ள ஐடிசி கிராண்ட் ஹோட்டலில் உங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
மகாராஷ்டிரம், கர்நாடகம் மற்றும் மத்தியப் பிரதேசங்களில் அரசியல் நாடகம் அரங்கேறியபோது இதே ஹோட்டலில்தான் பாஜக எம்எல்ஏ-க்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
பைலட் நடந்ததையெல்லாம் மறந்து, காங்கிரஸை எவ்வாறு பலப்படுத்தலாம் என்று திரும்ப வந்து ஆலோசனை நடத்த வேண்டும்." என்றால் திக்விஜய் சிங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...