நொய்டாவில் மேலும் 4 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 5ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் நாட்டில் கரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. இந்தியாவில் தொடர்ந்து 4ஆவது நாளாக இன்றும் கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,32,424ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் நொய்டாவில் மேலும் 4 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நொய்டா காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நொய்டாவில் உள்ள 49 காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களில் 4 பேருக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இத்துடன் கௌதம் புத்த நகரில் கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 17 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.