பந்தர்பூர்: மகாராஷ்டிராவின் கரோனா சரத் பவார் என்ற பாஜக மேலவை உறுப்பினரின் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது,
மகாராஷ்டிராவில் எதிர்கட்சியான பாஜகவின் சார்பாக சட்ட மேலவை உறுப்பினராக இருப்பவர் கோபிசந்த் பதால்கர். இவர் ஆளும் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரான சரத் பவாரை விமர்சித்து புதனன்று செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
அவர் தனது பேச்சில், ’ஜாதி அரசியல் மற்றும் பிரித்தாளும் சூழ்ச்சி செய்வதில் சரத் பவார் வல்லவர். அவர் மகாராஷ்டிராவின் கரோனா போன்றவர். இந்த மாநிலத்தின் முதல்வராக இருந்த போதிலும், பஹுஜன் சமுதாயத்திற்கு அநீதியைத்தான் இழைத்துள்ளார். அவர் தனக்கென்று தனியாக் கொள்கைகள் எதுவும் இல்லாதவர். இதர சிறிய குழுக்களைத் தூண்டி தன்னோடு இணையும்படி செய்து, பின்னர் அவர்களுக்கு எதுவும் செய்ய மாட்டார்’என்று கூறியிருந்தார்.
அவரது இந்த கருத்திற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாக கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதோடு, போரட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் பதால்கரின் கருத்திற்கு பாஜகவின் சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னவீஸ் மற்றும் சட்டமேலவை எதிர்கட்சித் தலைவர் பிரவீன் தரேகர் ஆகிய இருவரும் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.