யெஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணம் பாதுகாப்பாக உள்ளது: நிர்மலா சீதாராமன்

யெஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணம் பாதுகாப்பாக உள்ளது என்பதை வாடிக்கையாளர்களுக்கு உறுதிபடுத்துகிறோம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
யெஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணம் பாதுகாப்பாக உள்ளது: நிர்மலா சீதாராமன்


யெஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணம் பாதுகாப்பாக உள்ளது என்பதை வாடிக்கையாளர்களுக்கு உறுதிபடுத்துகிறோம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வாராக்கடன் சுமையால் பெரிய அளவிலான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தனியார் வங்கியான யெஸ் வங்கியின் நிர்வாகத்தை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தன்வசம் எடுத்துக்கொண்டு, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி பிரசாந்த் குமாரை யெஸ் வங்கி நிர்வாகியாக அறிவித்தது. யெஸ் வங்கியில் இருந்து வாடிக்கையாளா்கள் அதிகபட்சமாக ரூ.50,000 மட்டுமே எடுக்க முடியும் என்று வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுதொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) புதுதில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,

"2017-ஆம் முதலே வங்கியின் செயல்பாடுகள் மற்றும் அதுசார்ந்த விஷயங்கள் தினசரி அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வந்தது. ஆபத்தான கடன் முடிவுகள் குறித்து கண்டறியப்பட்டதால் நிர்வாகத்தில் மாற்றம் கொண்டுவர ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது.

இந்த முடிவுகள் வங்கியின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. செப்டம்பர் 2018-இல் புதிய தலைமைச் செயல் அதிகாரி நியமிக்கப்பட்டு, வங்கியை சீரமைப்பதற்கானப் பணிகள் தொடங்கப்பட்டன. விசாரணை அமைப்புகளும் முறைகேடுகளைக் கண்டறிந்துள்ளன.

அவசர நிலையை உணர்ந்து சட்டத்தின்படியே அனைத்து செயல்முறையும் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆர்பிஐ உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொள்கிறது. இன்னும் 30 நாட்களில் மறுசீரமைப்புத் திட்டம் முழுமையாக செயல்படும். யெஸ் வங்கியில் முதலீடு செய்ய பாரத ஸ்டேட் வங்கி விருப்பம் தெரிவித்துள்ளது. யெஸ் வங்கி ஊழியர்களின் வேலைவாய்ப்பு மற்றும் ஊதியம் ஒரு வருடத்துக்கு உறுதியளிக்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை நாங்கள் உறுதிபடுத்துகிறோம். வங்கியில் டெபாசிட் செய்துள்ள அனைவரது பணமும் பாதுகாப்பாக உள்ளது என்பதை வாடிக்கையாளர்களிடம் நாங்கள் உறுதிபடுத்துகிறோம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com