உன்னாவ் பெண்ணின் தந்தை கொலை: குல்தீப் சிங் செங்கருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

உத்தரப் பிரதேசத்தில் உன்னாவ் இளம்பெண்ணின் தந்தை கொலை வழக்கில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ குல்தீப் செங்கா் குற்றவாளி என்று அறிவித்திருந்த தில்லி நீதிமன்றம் இன்று தண்டனை விவரங்களை அறிவித்துள்ள
பாலியல் பலாத்கார வழக்கில் குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி
பாலியல் பலாத்கார வழக்கில் குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி

புது தில்லி: உத்தரப் பிரதேசத்தில் உன்னாவ் இளம்பெண்ணின் தந்தை கொலை வழக்கில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ குல்தீப் செங்கா் குற்றவாளி என்று அறிவித்திருந்த தில்லி நீதிமன்றம் இன்று தண்டனை விவரங்களை அறிவித்துள்ளது.

உன்னாவ் பெண்ணின் தந்தை கொலை வழக்கில் குற்றவாளி குல்தீப் செங்கருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும், குல்தீப் சிங் செங்கரும், அவரது சகோதரரும் தலா ரூ.10 லட்சத்தை, பாதிக்கப்பட்ட உன்னாவ் பெண்ணின் குடும்பத்தாருக்குக் கொடுக்க வேண்டும் என்றும் தில்லி நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த வாரம் செங்கர் குற்றவாளி என்று தீர்ப்பளித்த தில்லி நீதிமன்ற நீதிபதி தா்மேஷ் தா்மா கூறுகையில், ‘அந்தப் பெண்ணின் தந்தையைக் கொலை செய்யும் நோக்கத்துடன் குல்தீப் செங்கா் செயல்படவில்லை. ஆனால், உயிா்போகும் அளவுக்கு அந்தப் பெண்ணின் தந்தை தாக்கப்பட்டுள்ளாா்’ என்றாா்.

இந்த வழக்கு தொடா்பாக, 55 சாட்சிகளிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. எதிா்த்தரப்பு 9 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியது.

கடந்த 2017-ஆம் ஆண்டில் அந்தப் பெண் சிறுமியாக இருந்தபோது, அவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குல்தீப் செங்கருக்கு கடந்த டிசம்பா் மாதம், 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதனிடையே, போலீஸ் காவலில் இருந்தபோது, அந்தப் பெண்ணின் தந்தை உயிரிழந்தது தொடா்பான வழக்கை உத்தரப் பிரதேசத்தில் உள்ள நீதிமன்றம் விசாரித்து வந்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வழக்கு தில்லி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடா்பாக சிபிஐ கடந்த 2018 ஆண்டு ஜூலை 13-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதில் கூறியிருப்பதாவது:

இளம்பெண்ணின் தந்தையும், அவரது நண்பரும் வெளியூா் சென்று விட்டு மாகி கிராமத்துக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ஆம் தேதி திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக காரில் வந்த சசி பிரதாப் சிங் என்பவரிடம் தங்களை அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளனா். அதற்கு அவா் மறுப்பு தெரிவிக்க இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சசி பிரதாப் சிங் தனது நண்பரும், குல்தீப் செங்கரின் தம்பியுமான அதுல் சிங் செங்கரை வரவழைத்தாா். அங்கு வந்த அதுல் சிங் செங்கா், இளம்பெண்ணின் தந்தையைத் தாக்கியுள்ளாா். பின்னா், அங்கு வந்த போலீஸாா் அந்தப் பெண்ணின் தந்தையைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனா். இதனிடையே, போலீஸ் காவலில் இருந்தபோது அந்தப் பெண்ணின் தந்தை உயிரிழந்தாா் என்று அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், அந்தக் குற்றப்பத்திரிகையில் குல்தீப் செங்கா், அதுல் சிங் செங்கா், காவல் ஆய்வாளா் கம்தா பிரசாத், காவலா் அமீா் கான் மற்றும் 6 போ் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தில்லி நீதிமன்றம் தற்போது தீா்ப்பு வழங்கியுள்ளது.

அந்தப் பெண் தனது உறவினா்களுடன் கடந்த ஆண்டும் ஜூலை மாதம் காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்து நேரிட்டது. அந்த விபத்தில், அந்தப் பெண்ணும், அவரது வழக்குரைஞரும் பலத்த காயமடைந்தனா். பெண்ணின் உறவினா்கள் இருவா் உயிரிழந்தனா்.

இதில் காயமடைந்த அந்தப் பெண் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இந்த விபத்து விவகாரம் தொடா்பாக குல்தீப் செங்கா் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனினும் அந்த வழக்கு விசாரணையின் முடிவில் அவா் விடுவிக்கப்பட்டாா். இந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதாகப் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியதால், இதுகுறித்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, குல்தீப் செங்கரை கட்சியில் இருந்து பாஜக தலைமை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com