விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் விஷவாயுக் கசிவு விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்ப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ஆர்.ஆர். வெங்கடாபுரத்தில் உள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் தொழிற்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை விஷவாயு கசிவு ஏற்பட்டது. இந்த விஷவாயு அங்கு சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு பரவியதால் சுற்றுவட்டாரத்தில் உள்ள 5 கிராமங்களுக்குப் பரவியது. இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8-ல் இருந்து 13 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் நூற்றுக்கணக்கானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆலை இருக்கும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் குழந்தைகள், பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் அதிகமானோர் மயக்கம், மூச்சுத் திணறல், கண் எரிச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து, கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஷவாயுக் கசிவு விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், 'செயற்கை சுவாசக் கருவிகள் மூலம் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.10 லட்சம், 2 முதல் 3 நாள்கள் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம், முதற்கட்ட சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும். இதுதவிர, பாதிக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் 15 ஆயிரம் பேருக்கு தலா ரூ. 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்' என்று கூறினார்.