ஆந்திரத்தில் விஷவாயு கசிவு: 8 பேர் சாவு; நூற்றுக்கணக்கானோர் கவலைக்கிடம்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு ரசாயன ஆலையில் நேரிட்ட விஷவாயு கசிவால் 8 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.


திருப்பதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு ரசாயன ஆலையில் நேரிட்ட விஷவாயுக் கசிவால் 8 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் ஆர்.ஆர். வெங்கடாபுரத்தில் உள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் தொழிற்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை விஷவாயு கசிவு ஏற்பட்டது. இந்த விஷவாயு கசிவு அங்கு 3 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் உள்ள 5 கிராமங்களுக்குப் பரவியது. இதனால் மக்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டது. தோலில் தடிப்புகள், கண்களில் எரிச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளிட்டவற்றால் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

இந்த விஷவாயு கசிவை நுகர்ந்த 8 பேர் அந்தந்த இடத்திலேயே உயிரிழந்தனர். இதுபற்றித் தகவல் அறிந்த காவல்துறையினர் 25 ஆம்புலன்ஸ்களை வரவழைத்து பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களை பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். மக்கள் பயத்தால் வீட்டில் உள்ள கதவு, ஜன்னல்களை அடைத்து வீடுகளுக்குள் முடங்கினர்.

பின்னர் காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் அப்பகுதியை சுற்றியுள்ள 5 கிராம மக்கள் ஊரை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விஷவாயுவை நுகர்ந்த வீட்டு விலங்குகளான ஆடு, மாடு, நாய், பூனை, எலி உள்ளிட்ட பல ஆங்காங்கே வாயில் நுரை தள்ளியபடி விழுந்து உயிரிந்தன. இந்த விஷவாயுவை நுகராமலிருக்க முயற்சி செய்த பலர் கண்கள், வாய், மூக்கு உள்ளிட்டவற்றை மூடிக் கொண்டு சென்றதால், கிணற்றுக்குள், வடிகால்வாய்க்கால் உள்ளிட்டவற்றில் விழுந்து உயிரிழந்தனர். அதிகாலை நடைப் பயிற்சி செய்தவர்கள், வாகனங்களில் சென்றவர்கள் இந்த விஷவாயை நுகர்ந்த சில நிமிடங்களில் மயக்கமடைந்து விழுந்து வாயில் நுரை தள்ளி உயிரிழந்தனர்.

மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட காவல்துறையினரும் சிலர் இந்த விஷவாயுவை நுகர்ந்தால் மயக்கமடைந்தனர்.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி இந்த விஷவாயு கசிவால் ஏற்பட்ட இடங்களில் வியாழக்கிழமை காலை பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளித்து உயிர்களைக் காப்பாற்றவும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பாலிமர்ஸ் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் விஷவாயுகளில் இந்த ஸ்டீரினும் ஒன்று. பல நாட்களாக ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த தொழிற்சாலை கடந்த 3 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால் உரிய மேற்பார்வை மற்றும் பராமரிப்பு இல்லாமல் உடனடியாக தொழிற்சாலை திறக்கப்பட்டதால் ஸ்டீரின் வாயு இருந்த கலம் வெடித்து விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் மாநில பேரிடர் மீட்பு படையினர், காவல்துறையினர், ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறும், மின்சாதனங்களை இயக்க வேண்டாம் எனவும் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...