/

நிர்மலா சீதாராமன் அறிவித்த வேலைவாய்ப்புத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்

தொழில்துறைக்கு புதிய ஊக்கத் திட்டங்களை இன்று அறிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார

News image

வளர்ச்சிப் பாதையை நோக்கி இந்தியப் பொருளாதாரம்: நிர்மலா சீதாராமன்

Updated On :12 நவம்பர் 2020, 1:02 pm

DIN

புது தில்லி: தொழில்துறைக்கு புதிய ஊக்கத் திட்டங்களை இன்று அறிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

கரோனா பொது முடக்கம் காரணமாக முடங்கிப் போன தொழில்நிறுவனங்களையும், நாட்டின் வேலை வாய்ப்பை உருவாக்கும் தொழில்நிறுவனங்களையும் ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத் தொகை வழங்கும் தற்சார்பு இந்திய வேலை வாய்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.

இந்த திட்டத்தின் கீழ்,
தொழிலாளர் வருங்கால வைப்புத் திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் புதிய தொழிலாளியாக இணைந்தவர்களும், கடந்த மார்ச் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை வேலை வாய்ப்பை இழந்தவர்களும் இந்த வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் சில குறிப்பிட்ட சலுகைகளைப் பெறலாம்.

அந்தவகையில், ஊழியர்களின் பங்களிப்பு (ஊதியத்தில் 12 சதவீதம்) மற்றும் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு (ஊதியத்தில் 12 சதவீதம்) மொத்தம் 24 சதவீத ஊதியம் இரண்டு ஆண்டுகளுக்கு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

அதேவேளையில், 2020 அக்டோபர் 1-ம் தேதி முதல் 2021 ஜூன் 30 வரையிலான காலக்கட்டத்தில், நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தொழிலாளர்களை பணியமர்த்திய நிறுவனங்களும் இந்த திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கு சில சலுகைகளைப் பெறலாம் என்று அறிவித்துள்ளார்.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதற்கான சில அறிகுறிகள் தென்படுவதாகக் குறிப்பிட்டார். அதேவேளையில் இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளும் ஏற்படுத்தப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது கரோனா பரவல் குறைந்து வருகிறது, நாட்டில் தற்போதைய நிலையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10 லட்சத்திலிருந்து 4.89 லட்சமாகக் குறைந்துள்ளது. கரோனா பலி எண்ணிக்கையும் 1.47 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றார் நிர்மலா சீதாராமன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.