வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட தலைநகரை நோக்கி வரும் விவசாயிகளை தில்லியினுள் அனுமதிக்க வேண்டும் என்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
அவர்கள் நம் நாட்டின் விவசாயிகள் என்பதால், விவசாயிகள் விரும்பும் இடத்தில் போராட்டம் நடத்தவும் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி ஏராளமான விவசாயிகள் தலைநகரான தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பஞ்சாப் விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு ஹரியாணா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆதரவு தெரிவித்து போராட்டக்காரர்களுக்குத் தேவையான உணவுப்பொருள்களுடன் வாகனங்களில் பேரணியாக புறப்பட்டனர்.
எனினும் அவர்கள் தில்லி எல்லையில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தில்லியில் புராரி திடலுக்குச் செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். இதனால் சாலைகளில் விவசாயிகள் உணவு சமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து பேசிய தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்கு எந்த நிபந்தனையும் இருக்கக்கூடாது. விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்த வேண்டும். தில்லியில் விவசாயிகள் விரும்பும் இடத்தில் போராட்டம் நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.