பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில், லக்னெள சிபிஐ சிறப்பு நீதிமன்றம், இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பளிக்கவுள்ளது. 
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு
Updated on
1 min read

லக்னெள: பாபர் மசூதி இடிப்பு வழக்கில், லக்னெள சிபிஐ சிறப்பு நீதிமன்றம், இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பளிக்கவுள்ளது. 

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சுமார் 2,000 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பை நீதிபதி எஸ்.கே. யாதவ் வாசித்து வருகிறார்.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் வயது முதிர்வு காரணமாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனால், அவர்கள் காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.இவர்கள் தவிர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 26 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். 

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் ராமஜென்மபூமி இயக்கத்தை முன்னெடுத்த பாஜக மூத்த தலைவர் அத்வானி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், வினய் கட்டியார், சாத்வி ரிதம்பரா உள்பட 32 பேருக்கு மசூதி இடிப்பில் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து, 351 பேரிடம் விசாரணை நடத்தி, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக 600 பக்க அறிக்கையை லக்னெள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதனடிப்படையில் 48 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இவர்களில் 16 பேர் உயிரிழந்துவிட்டனர்.

இந்த வழக்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நிறைவு செய்து தீர்ப்பளிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பின்னர் மேலும் ஒரு மாதம் அவகாசம் அளித்து, செப்டம்பர் இறுதிக்குள் தீர்ப்பளிக்குமாறு உத்தரவிட்டது.

முரளி மனோகர் ஜோஷி கடந்த ஜூலை 23-ஆம் தேதியும், அத்வானி ஜூலை 24-ஆம் தேதியும் சிறப்பு நீதிமன்றத்தில் காணொலி முறையில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். 

இதேபோன்று கல்யாண் சிங், உமா பாரதி ஆகியோர் வெவ்வேறு நாள்களில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

இந்த வழக்கில் தேவையின்றி தங்களை சிக்க வைத்திருப்பதாகவும், அரசியல் நெருக்கடி காரணமாக சிபிஐ தங்கள் மீது வழக்கு தொடுத்திருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

வழக்கில் தொடர்புடைய 32 பேரும் வாக்குமூலம் அளித்துவிட்டதால் தீர்ப்பு எழுதும் பணியை நீதிபதி எஸ்.கே.யாதவ் நிறைவு செய்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கில்,  இன்று நீதிபதி எஸ்.கே. யாதவ் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பளிக்க உள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com