புது தில்லி: கரோனா வார்டாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளை தெலங்கானாவும், தில்லியும் பயன்படுத்தத் தயாராகியுள்ளன.
அவ்வாறு கரோனா வார்டாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளை இந்திய ரயில்வேயிடம் இருந்து தெலங்கானா மற்றும் தில்லி அரசுகள் கோரியுள்ளன. தெலங்கானா அரசு 60 ரயில் பெட்டிகளையும், தில்லி அரசு 10 ரயில் பெட்டிகளையும் கேட்டுள்ளன.
கரோனா அறிகுறி இல்லாதவர்களை இந்த ரயில் பெட்டிகளில் வைத்து கண்காணிக்கும் வகையில் தெலங்கானா மற்றும் தில்லி அரசுகள் ரயில் பெட்டிகளை வாங்க உள்ளன.
தெலங்கானாவின் செகுந்தராபாத், கச்சிகுடா, அடிலாபாத் ஆகிய பகுதிகளுக்கு 60 ரயில் பெட்டிகளும், தில்லிக்கு 10 ரயில் பெட்டிகளும் வழங்கப்பட உள்ளதாகவும், இதுவரை சுமார் 5,213 ரயில் பெட்டிகள் கரோனா வார்டுகளாக மாற்றப்பட்டிருப்பதாகவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.